தொல்காப்பியம் - மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்

 

 

1. அகத்திணையியல்

 

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழு திணை என்ப. 1

 

அவற்றுள்,

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய

படு திரை வையம் பாத்திய பண்பே. 2

 

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலும் காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடும் காலை. 3

 

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே. 4

 

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 5

 

காரும் மாலையும் முல்லை. 6

 

குறிஞ்சி,

கூதிர் யாமம் என்மனார் புலவர். 7

 

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8

 

வைகறை விடியல் மருதம். 9

 

எற்பாடு,

நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10

 

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. 11

 

பின்பனிதானும் உரித்து என மொழிப. 12

 

இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 13

 

திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே

நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப

புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. 14

 

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. 15

 

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. 16

 

கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்

உண்டு என மொழிப ஓர் இடத்தான. 17

 

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. 18

 

முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே. 19

 

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ் வகை பிறவும் கரு என மொழிப. 20

 

எந் நில மருங்கின் பூவும் புள்ளும்

அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

வந்த நிலத்தின் பயத்த ஆகும். 21

 

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய

திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே. 22

 

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23

 

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே. 24

 

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்

கடிவரை இல புறத்து என்மனார் புலவர். 25

 

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்

ஆகிய நிலைமை அவரும் அன்னர். 26

 

ஓதல் பகையே தூது இவை பிரிவே. 27

 

அவற்றுள்,

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. 28

 

தானே சேறலும் தன்னொடு சிவணிய

ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. 29

 

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

முல்லை முதலாச் சொல்லிய முறையான்

பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்

இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே. 30

 

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. 31

 

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. 32

 

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான. 33

 

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய

ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே. 34

 

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. 35

 

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான. 36

 

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. 37

 

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான. 38

 

தன்னும் அவனும் அவளும் சுட்டி

மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்

நன்மை தீமை அச்சம் சார்தல் என்று

அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ

முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றாய் புலம்பலும்

ஆகிய கிளவியும் அவ் வழி உரிய. 39

 

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே. 40

 

அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. 41

 

தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்

போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்

நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித்

தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்

நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை

அழிந்தது களை என மொழிந்தது கூறி

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு

என்று இவை எல்லாம் இயல்புற நாடின்

ஒன்றித் தோன்றும் தோழி மேன. 42

 

பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

ஊரது சார்பும் செல்லும் தேயமும்

ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்

புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு

அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்

தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்

சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்

கண்டோர் மொழிதல் கண்டது என்ப. 43

 

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்

ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்

இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்

கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்

கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட

அப் பால் பட்ட ஒரு திறத்தானும்

நாளது சின்மையும் இளமையது அருமையும்

தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்

இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்

அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்

ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்

வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு

ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்

தூது இடையிட்ட வகையினானும்

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்

மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்

தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்

பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்

பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்

காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்

பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி

இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு

உரைத் திற நாட்டம் கிழவோன் மேன. 44

 

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே. 45

 

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். 46

 

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. 47

 

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி

விரவும் பொருளும் விரவும் என்ப. 48

 

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. 49

 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்

கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. 50

 

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். 51

 

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. 52

 

காமம் சாலா இளமையோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 53

 

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇ

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54

 

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. 55

 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 56

 

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். 57

 

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. 58

 

 

 

2. புறத்திணையியல்

 

அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சிதானே குறிஞ்சியது புறனே

உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே. 1

 

வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். 2

 

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

புடை கெடப் போகிய செலவே புடை கெட

ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்

முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய

ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே

நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்

தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என

வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும். 3

 

மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4

 

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்

போந்தை வேம்பே ஆர் என வரூஉம்

மா பெருந்தானையர் மலைந்த பூவும்

வாடா வள்ளி வயவர் ஏத்திய

ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா

உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்

தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்

வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று

இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க

நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று

இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 5

 

வஞ்சிதானே முல்லையது புறனே

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்

அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. 6

 

இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்

வயங்கல் எய்திய பெருமையானும்

கொடுத்தல் எய்திய கொடைமையானும்

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்

மாராயம் பெற்ற நெடுமொழியானும்

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்

வரு விசைப் புனலைக் கற் சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்

குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்

அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ

கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே. 7

 

உழிஞைதானே மருதத்துப் புறனே

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. 8

 

அதுவேதானும் இரு நால் வகைத்தே. 9

 

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்

அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட

ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்

வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட

சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே. 10

 

குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்

சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்

புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்

நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று

ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற

தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ

வகை நால் மூன்றே துறை என மொழிப. 11

 

தும்பைதானே நெய்தலது புறனே

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12

 

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு

இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13

 

தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூ வகை நிலையும்

வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்

தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்

இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு

கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து

பாழி கொள்ளும் ஏமத்தானும்

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு

பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து

இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்

ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்

செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ

ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14

 

வாகைதானே பாலையது புறனே

தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. 15

 

அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐ வகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்

மறு இல் செய்தி மூ வகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்

பால் அறி மரபின் பொருநர்கண்ணும்

அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்

தொகை நிலைபெற்றது என்மனார் புலவர். 16

 

கூதிர் வேனில் என்று இரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்

ஏரோர் களவழி அன்றி களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்

வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்

ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்

பெரும் பகை தாங்கும் வேலினானும்

அரும் பகை தாங்கும் ஆற்றலானும்

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்

சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து

தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்

பகட்டினானும் ஆவினானும்

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

கடி மனை நீத்த பாலின்கண்ணும்

எட்டு வகை நுதலிய அவையகத்தானும்

கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்

இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்

பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்

பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்

அருளொடு புணர்ந்த அகற்சியானும்

காமம் நீத்த பாலினானும் என்று

இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. 17

 

காஞ்சிதானே பெருந்திணைப் புறனே

பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே. 18

 

மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்

புண் கிழித்து முடியும் மறத்தினானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்

இன்னன் என்று இரங்கிய மன்னையானும்

இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்

துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்

துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்

நீத்த கணவன் தீர்த்த வேலின்

பேஎத்த மனைவி ஆஞ்சியானும்

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்

முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ

ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்

மாய்ந்த பூசல் மயக்கத்தானும்

தாமே எய்திய தாங்க அரும் பையுளும்

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்

செல்வோர் செப்பிய மூதானந்தமும்

நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து

தனி மகள் புலம்பிய முதுபாலையும்

கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்

சொல் இடையிட்ட பாலை நிலையும்

மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த

தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்

மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே.19

 

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடும் காலை நால் இரண்டு உடைத்தே. 20

 

அமரர்கண் முடியும் அறு வகையானும்

புரை தீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. 21

வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்

முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை

வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே. 22

 

காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். 23

 

குழவி மருங்கினும் கிழவது ஆகும். 24

 

ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப

வழக்கொடு சிவணிய வகைமையான. 25

 

மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.26

 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. 27

 

கொற்றவள்ளை ஓர் இடத்தான. 28

 

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்

சேய் வரல் வருத்தம் வீட வாயில்

காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்

கண்படை கண்ணிய கண்படை நிலையும்

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்

வேலை நோக்கிய விளக்கு நிலையும்

வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்

கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ

தொக்க நான்கும் உள என மொழிப. 29

 

தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்

சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி

பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி

பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்

மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்

மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்

பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி

நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே. 30

 

 

 

3. களவியல்

 

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.1

 

ஒன்றே வேறே என்று இரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே. 2

 

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப

இழிந்துழி இழிபே சுட்டலான. 3

 

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப. 4

 

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

 

குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்

ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். 6

 

பெருமையும் உரனும் ஆடூஉ மேன. 7

 

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. 8

 

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்

சிறப்புடை மரபினவை களவு என மொழிப. 9

 

முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்

நல் நயம் உரைத்தல் நகை நனி உறாஅ

அந் நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்

தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று

இன்னவை நிகழும் என்மனார் புலவர். 10

 

மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்

இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்

தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ

பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்

குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்

நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்

தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி

குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்

தண்டாது இரப்பினும் மற்றைய வழியும்

சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்

அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின்

கேடும் பீடும் கூறலும் தோழி

நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி

மடல் மா கூறும் இடனுமார் உண்டே. 11

 

பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்

அன்புற்று நகினும் அவட் பெற்று மலியினும்

ஆற்றிடை உறுதலும் அவ் வினைக்கு இயல்பே. 12

 

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

 

முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. 14

 

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. 15

 

முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே. 16

 

இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்

காணா வகையின் பொழுது நனி இகப்பினும்

தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்

காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்

புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி

பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்

வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்

தாளாண் எதிரும் பிரிவினானும்

நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்

வரைதல் வேண்டித் தோழி செப்பிய

புரை தீர் கிளவி புல்லிய எதிரும்

வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்துப்

புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ

கிழவோள் மேன என்மனார் புலவர். 17

 

காமத் திணையின் கண் நின்று வரூஉம்

நாணும் மடனும் பெண்மைய ஆகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயினான. 18

 

காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உள என மொழிப. 19

 

சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்

அல்ல கூற்றுமொழி அவள்வயினான. 20

 

மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல்

நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்

வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல்

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்

கைப்பட்டுக் கலங்கினும் நாணு மிக வரினும்

இட்டுப் பிரிவு இரங்கினும் அருமை செய்து அயர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும்

நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்

பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்

கூறிய வா`யில் கொள்ளாக் காலையும்

மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர் செல

வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்

நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்

அருமை சான்ற நால் இரண்டு வகையின்

பெருமை சான்ற இயல்பின்கண்ணும்

பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்

வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்

குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்

வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்

தமர் தற் காத்த காரண மருங்கினும்

தன் குறி தள்ளிய தெருளாக் காலை

வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்

தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்

வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்

பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்

அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்

காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்

ஏமம் சான்ற உவகைக்கண்ணும்

தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்

அன்னவும் உளவே ஓர் இடத்தான. 21

 

வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும்

வரையா நாளிடை வந்தோன் முட்டினும்

உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்

தானே கூறும் காலமும் உளவே. 22

 

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்

தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு

காமக் கிழவன் உள்வழிப் படினும்

தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்

ஆ வகை பிறவும் தோன்றுமன் பொருளே. 23

 

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்

புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்

உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது

பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்

குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்

பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும்

அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப்

பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும்

முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்

அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு

எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்

வந்த கிழவனை மாயம் செப்பிப்

பொறுத்த காரணம் குறித்த காலையும்

புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்

குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக

தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ

பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்

நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்

எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்

புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்

வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்

புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்

ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்

செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்

என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ

அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்

காப்பின் கடுமை கையற வரினும்

களனும் பொழுதும் வரை நிலை விலக்கி

காதல் மிகுதி உளப்படப் பிறவும்

நாடும் ஊரும் இல்லும் குடியும்

பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி

அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ

அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்

ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து

பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்

அவன் விலங்குறினும் களம் பெறக் காட்டினும்

பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்

முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்

புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்

வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும்

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட

பாங்குற வந்த நால் எட்டு வகையும்

தாங்க அருஞ் சிறப்பின் தோழி மேன. 24

 

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்

அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்

கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்

ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்

காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்

தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்

போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக்

கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்

பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்

இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்

இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு

அன்னவை பிறவும் செவிலி மேன. 25

 

தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. 26

 

கிழவோன் அறியா அறிவினள் இவள் என

மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. 27

 

தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்

எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை

பிற நீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந் நீர் போலும் உணர்விற்று என்ப. 28

 

காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின்

தாமே தூதுவர் ஆகலும் உரித்தே. 29

 

அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்

களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

தான் செலற்கு உரிய வழி ஆகலான. 30

 

தோழியின் முடியும் இடனுமார் உண்டே. 31

 

முந் நாள் அல்லது துணை இன்று கழியாது

அந் நாள் அகத்தும் அது வரைவு இன்றே. 32

 

பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்

நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்

துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

துணையோர் கருமம் ஆகலான. 33

 

ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்

தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். 34

 

தோழிதானே செவிலி மகளே. 35

 

சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. 36

 

குறையுற உணர்தல் முன் உற உணர்தல்

இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என

மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே. 37

 

அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது

பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப. 38

 

முயற்சிக் காலத்து அதற்பட நாடி

புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான. 39

 

குறி எனப்படுவது இரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்றது என்ப. 40

 

இரவுக் குறியே இல்லகத்துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலையான. 41

 

பகல் புணர் களனே புறன் என மொழிப

அவள் அறிவு உணர வரு வழியான. 42

 

அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே

அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே. 43

 

ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே

ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான. 44

 

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை. 45

 

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்

ஊறும் உளப்பட அதன் ஓரன்ன. 46

 

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. 47

 

தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும். 48

 

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்

அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும். 49

 

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

 

வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை. 51

 

 

 

4. கற்பியல்

 

கற்பு எனப்படுவது கரணமொடு புணர

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1

 

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன் போகிய காலையான. 2

 

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3

 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.4

 

கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்

எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்

அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்

நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ

குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்

நாமக் காலத்து உண்டு எனத் தோழி

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்

அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ

சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என

ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என

அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்

அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்

ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்

களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்

அந்தரத்து எழுதிய எழுத்தின் மான

வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்

அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும்

தான் அவட் பிழைத்த பருவத்தானும்

நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி

பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி

தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்

புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்

நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி

ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்

செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்

பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது

உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி

அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்

மெல்லென் சீறடி புல்லிய இரவினும்

உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்

பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்

பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்

பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்

நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்

சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்

காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்

தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்

உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்

மடம் பட வந்த தோழிக்கண்ணும்

வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்

மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்

அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்

பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்

காமக் கிழத்தி மனையோள் என்று இவர்

ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்

சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி

இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்

அருந் தொழில் முடித்த செம்மல் காலை

விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்

மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்

கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்

ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ

பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்

எண்ண அருஞ் சிறப்பின் கிழவோன் மேன. 5

 

அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்

ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும்

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்

பெருமையின் திரியா அன்பின்கண்ணும்

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்

அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி

நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ

நளியின் நீக்கிய இளி வரு நிலையும்

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு

அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி

இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி

எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி

எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்ணும்

செல்லாக் காலை செல்க என விடுத்தலும்

காமக் கிழத்தி தன் மகத் தழீஇ

ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்

சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி

அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை

புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்

அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது

நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ

பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்

கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி

காதல் எங்கையர் காணின் நன்று என

மாதர் சான்ற வகையின்கண்ணும்

தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை

மாயப் பரத்தை உள்ளிய வழியும்

தன்வயின் சிறைப்பினும் அவன் வயின் பிரிப்பினும்

இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்

காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய

தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்

கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை

வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை

காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்

ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்

வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ

கிழவோள் செப்பல் கிழவது என்ப. 6

 

புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து

இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி

அன்புறு தக்க கிளத்தல் தானே

கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். 7

 

தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்

ஆவயின் நிகழும் என்மனார் புலவர். 8

 

பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த

தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்

அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாக்

கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்

சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்

அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை

அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்

பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி

இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்

வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்

சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்

மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்

பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்

சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்

பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து

பெறு தகை இல்லாப் பிழைப்பினும் அவ் வழி

உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய

கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்

உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்

உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று

தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்

அருமைக் காலத்துப் பெருமை காட்டிய

எளிமைக் காலத்து இரக்கத்தானும்

பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்

பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்

காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்

பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய

மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்

வகை பட வந்த கிளவி எல்லாம்

தோழிக்கு உரிய என்மனார் புலவர். 9

 

புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்

இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்

பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்

மறையின் வந்த மனையோள் செய்வினை

பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்

காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்

தாய் போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்

காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்

இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து

பின்னர் வந்த வாயிற்கண்ணும்

மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்

மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்

எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்

கண்ணிய காமக்கிழத்தியர் மேன. 10

 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய. 11

 

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரிய ஆகும் என்ப. 12

 

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. 13

 

இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்

கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின். 14

 

உணர்ப்பு வரை இறப்பினும் செய் குறி பிழைப்பினும்

புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய. 15

 

புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்

சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய. 16

 

பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி

மடத் தகு கிழமை உடைமையானும்

அன்பிலை கொடியை என்றலும் உரியள். 17

 

அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி

அகம் மலி ஊடல் அகற்சிக்கண்ணும்

வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 18

 

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணும் காலை கிழவோற்கு உரித்தே

வழிபடு கிழமை அவட்கு இயலான. 19

 

அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி

பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. 20

 

களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. 21

 

அலரின் தோன்றும் காமத்து மிகுதி. 22

 

கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. 23

 

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை

தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை. 24

 

மனைவி முன்னர்க் கையறு கிளவி

மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே. 25

 

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்

பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர். 26

 

தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்

பல் ஆற்றானும் ஊடலின் தகைத்தலும்

உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்

அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன. 27

 

நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. 28

 

ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்

ஏவல் முடிவும் வினாவும் செப்பும்

ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்

தோற்றம் சான்ற அன்னவை பிறவும்

இளையோர்க்கு உரிய கிளவி என்ப. 29

 

உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்

நடக்கை எல்லாம் அவர்கண் படுமே. 30

 

பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்

தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்

இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்

இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர். 31

 

தாய் போல் கழறித் தழீஇக் கோடல்

ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப

கவவொடு மயங்கிய காலையான. 32

 

அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்

மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்

செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான. 33

 

எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார். 34

 

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 35

 

காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும்

கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்

ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்

செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 36

 

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. 37

 

அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர். 38

 

தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்

எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை

முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே. 39

 

கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி

கிழவோன் வினைவயின் உரிய என்ப. 40

 

மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. 41

 

குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். 42

 

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்

வன்புறுத்தல்லது சேறல் இல்லை. 43

 

செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே

வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும். 44

 

கிழவி நிலையே வினையிடத்து உரையார்

வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் 45

 

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையின் பிரிந்த காலையான. 46

 

வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. 47

 

வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. 48

 

ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். 49

 

யாறும் குளனும் காவும் ஆடி

பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப. 50

 

காமம் சான்ற கடைக்கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 51

 

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாட்டி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. 52

 

வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை

இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை

உள்ளம் போல உற்றுழி உதவும்

புள் இயல் கலி மா உடைமையான. 53

 

 

 

5. பொருளியல்

 

இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே

அசை திரிந்து இசையா என்மனார் புலவர். 1

 

நோயும் இன்பமும் இரு வகை நிலையின்

காமம் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடையது போல் உணர்வுடையது போல்

மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ

செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்

அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இரு பெயர் மூன்றும் உரிய ஆக

உவமவாயில் படுத்தலும் உவமம்

ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி. 2

 

கனவும் உரித்தால் அவ் இடத்தான. 3

 

தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின்.4

 

பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே

நட்பின் நடக்கை ஆங்கு அலங்கடையே. 5

 

உயிரும் நாணும் மடனும் என்று இவை

செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. 6

 

வண்ணம் பசந்து புலம்புறு காலை

உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி

புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே. 7

 

உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்

என் உற்றனகொல் இவை எனின் அல்லதை

கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை. 8

 

ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும் காலை

உரியதாகலும் உண்டு என மொழிப. 9

 

தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல் வழி எல்லாம்

மடனொடு நிற்றல் கடன் என மொழிப. 10

 

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி

அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப. 11

 

எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ

அவ் எழு வகைய என்மனார் புலவர். 12

 

உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப் பொருள் வேட்கை கிழவியின் உணர்ப. 13

 

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான. 14

 

பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும்

இரவினும் பகலினும் நீ வா என்றலும்

கிழவோன் தன்னை வாரல் என்றலும்

நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்

புரை பட வந்த அன்னவை பிறவும்

வரைதல் வேட்கைப் பொருள என்ப. 15

 

வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்து என மொழிப. 16

 

தேரும் யானையும் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. 17

 

உண்டற்கு உரிய அல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே. 18

 

பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே

காப்புக் கைம்மிகுதல் உண்மையான

அன்பே அறனே இன்பம் நாணொடு

துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின்

ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே. 19

 

சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. 20

 

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. 21

 

அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின்

வழக்கு என வழங்கலும் பழித்து அன்று என்ப. 22

 

மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க

நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே. 23

 

முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்

நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே.24

 

தாயத்தின் அடையா ஈயச் செல்லா

வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்

அல்லாவாயினும் புல்லுவ உளவே. 25

 

ஒரு பால் கிளவி எனைப் பாற்கண்ணும்

வரு வகைதானே வழக்கு என மொழிப. 26

 

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். 27

 

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத் திரிபு இன்று அஃது என்மனார் புலவர். 28

 

ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்

பிரிதல் அச்சம் உண்மையானும்

அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று

அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும்

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். 29

 

வருத்த மிகுதி சுட்டும் காலை

உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம். 30

 

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையும் காலை புலவியுள் உரிய. 31

 

நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின்

புகழ் தகை வரையார் கற்பினுள்ளே. 32

 

இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. 33

 

இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே

திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. 34

 

அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்

வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. 35

 

செய் பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்

மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே. 36

 

கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும்

உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப. 37

 

கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி

கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். 38

 

தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும்

மெய்ம்மையாக அவர்வயின் உணர்ந்தும்

தலைத்தாட் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே

மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே. 39

 

பொழுது தலைவைத்த கையறு காலை

இறந்த போலக் கிளக்கும் கிளவி

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு

அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப. 40

 

இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி

நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்

வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும்

நல் வகையுடைய நயத்தின் கூறியும்

பல் வகையானும் படைக்கவும் பெறுமே. 41

 

உயர் மொழிக் கிளவி உறழும் கிளவி

ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே. 42

 

உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின்

உரியதாகும் தோழிகண் உரனே. 43

 

உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. 44

 

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தா இன்று உரிய தம்தம் கூற்றே. 45

 

உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே. 46

 

அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. 47

 

மங்கல மொழியும் வைஇய மொழியும்

மாறு இல் ஆண்மையின் சொல்லிய மொழியும்

கூறிய மருங்கின் கொள்ளும் என்ப. 48

 

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு

அனை நால் வகையும் சிறப்பொடு வருமே. 49

 

அன்னை என்னை என்றலும் உளவே

தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்றா மரபின என்மனார் புலவர். 50

 

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா

சாயலும் நாணும் மடனும் என்றா

நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு

ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது

காட்டலாகாப் பொருள என்ப. 51

 

இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும்

அவை இல் காலம் இன்மையான. 52

 

 

 

6. மெய்ப்பாட்டியல்

 

பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும்

கண்ணிய புறனே நால் நான்கு என்ப. 1

 

நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 2

 

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப. 3

 

எள்ளல் இளமை பேதைமை மடன் என்று

உள்ளப்பட்ட நகை நான்கு என்ப. 4

 

இளிவே இழவே அசைவே வறுமை என

விளிவு இல் கொள்கை அழுகை நான்கே. 5

 

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே. 6

 

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே. 7

 

அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே. 8

 

கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே. 9

 

உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. 10

 

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று

அல்லல் நீத்த உவகை நான்கே. 11

 

ஆங்கவை ஒரு பால் ஆக ஒரு பால்

உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்

தன்மை அடக்கம் வரைதல் அன்பு எனாஅ

கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்

நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ

முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை

கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு எனாஅ

கையாறு இடுக்கண் பொச்சாப்பு பொறாமை

வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு எனாஅ

இவையும் உளவே அவை அலங்கடையே. 12

 

புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்

நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு

தகு முறை நான்கே ஒன்று என மொழிப. 13

 

கூழை விரித்தல் காது ஒன்று களைதல்

ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு

ஊழி நான்கே இரண்டு என மொழிப. 14

 

அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்

இல் வலியுறுத்தல் இரு கையும் எடுத்தலொடு

சொல்லிய நான்கே மூன்று என மொழிப. 15

 

பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல்

ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்

கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ

எடுத்த நான்கே நான்கு என மொழிப. 16

 

தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல்

கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு

பொருந்திய நான்கே ஐந்து என மொழிப. 17

 

புறம் செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்

கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு

விளம்பிய நான்கே ஆறு என மொழிப. 18

 

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

மன்னிய வினைய நிமித்தம் என்ப. 19

 

வினை உயிர் மெலிவு இடத்து இன்மையும் உரித்தே. 20

 

அவையும் உளவே அவை அலங்கடையே. 21

 

இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்

எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்

பசி அட நிற்றல் பசலை பாய்தல்

உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல்

கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்

பொய்யாக் கோடல் மெய்யே என்றல்

ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல்

அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்

எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்

ஒப்புவழி உவத்தல் உறு பெயர் கேட்டல்

நலத் தக நாடின் கலக்கமும் அதுவே. 22

 

முட்டுவயின் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல்

அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்

தூது முனிவு இன்மை துஞ்சிச் சேர்தல்

காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று

ஆயிரு நான்கே அழிவு இல் கூட்டம். 23

 

தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல்

இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்

புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம்

அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல்

பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல்

புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ

சிறந்த பத்தும் செப்பிய பொருளே. 24

 

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திரு என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 25

 

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை

என்று இவை இன்மை என்மனார் புலவர். 26

 

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

நல் நயப் பொருள்கோள் எண்ண அருங்குரைத்தே. 27

 

 

 

7. உவமயியல்

 

வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம். 1

 

விரவியும் வரூஉம் மரபின என்ப. 2

 

உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை. 3

 

சிறப்பே நலனே காதல் வலியொடு

அந் நால் பண்பும் நிலைக்களம் என்ப. 4

 

கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும். 5

 

முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்

நுதலிய மரபின் உரியவை உரிய. 6

 

சுட்டிக் கூறா உவமம் ஆயின்

பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. 7

 

உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். 8

 

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும். 9

 

பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்

குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய. 10

 

அவைதாம்,

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப

என்ன மான என்றவை எனாஅ

ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க

என்ற வியப்ப என்றவை எனாஅ

எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப

கள்ள கடுப்ப ஆங்கவை எனாஅ

காய்ப்ப மதிப்ப தகைய மருள

மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅ

புல்ல பொருவ பொற்ப போல

வெல்ல வீழ ஆங்கவை எனாஅ

நாட நளிய நடுங்க நந்த

ஓட புரைய என்றவை எனாஅ

ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்

கூறும் காலைப் பல் குறிப்பினவே. 11

 

அன்ன ஆங்க மான விறப்ப

என்ன உறழ தகைய நோக்கொடு

கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம். 12

 

அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும். 13

 

எள்ள விழைய புல்ல பொருவ

கள்ள மதிப்ப வெல்ல வீழ

என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம். 14

 

கடுப்ப ஏய்ப்ப மருள புரைய

ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று

அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம். 15

 

போல மறுப்ப ஒப்ப காய்த்த

நேர வியப்ப நளிய நந்த என்று

ஒத்து வரு கிளவி உருவின் உவமம். 16

 

தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே. 17

 

நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 18

 

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்

வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப. 19

 

உவமப் பொருளின் உற்றது உணரும்

தெளி மருங்கு உளவே திறத்து இயலான. 20

 

உவமப் பொருளை உணரும் காலை

மரீஇய மரபின் வழக்கொடு வருமே. 21

 

இரட்டைக்கிளவி இரட்டை வழித்தே. 22

 

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி

முன்னை மரபின் கூறும் காலை

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே. 23

 

உவமப் போலி ஐந்து என மொழிப. 24

 

தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்

பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப. 25

 

கிழவி சொல்லின் அவள் அறி கிளவி. 26

 

தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது. 27

 

கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும். 28

 

ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே. 29

 

இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்

உவம மருங்கின் தோன்றும் என்ப. 30

 

கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே. 31

 

கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே. 32

 

தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

கூறுதற்கு உரியர் கொள் வழியான. 33

 

வேறுபட வந்த உவமத் தோற்றம்

கூறிய மருங்கின் கொள் வழிக் கொளாஅல். 34

 

ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. 35

 

உவமத் தன்மையும் உரித்து என மொழிப

பயனிலை புரிந்த வழக்கத்தான. 36

 

தடுமாறு உவமம் கடி வரை இன்றே. 37

 

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே

நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம்

வரன் முறை வந்த மூன்று அலங்கடையே. 38

 

 

 

8. செய்யுளியல்

 

மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ

யாத்த சீரே அடி யாப்பு எனாஅ

மரபே தூக்கே தொடை வகை எனாஅ

நோக்கே பாவே அளவு இயல் எனாஅ

திணையே கைகோள் கூற்று வகை எனாஅ

கேட்போர் களனே கால வகை எனாஅ

பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ

முன்னம் பொருளே துறை வகை எனாஅ

மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்

ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்

அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ

நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என

வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே. 1

 

அவற்றுள்,

மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்

மேல் கிளந்தனவே என்மனார் புலவர். 2

 

குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்

ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி

நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3

இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே

நேர்பும் நிரைபும் ஆகும் என்ப

குறில் இணை உகரம் அல் வழியான. 4

 

இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை. 5

 

தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6

 

ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம். 7

 

முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ

நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும். 8

 

குற்றியலுகரமும் முற்றியலுகரமும்

ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. 9

 

அசையும் சீரும் இசையொடு சேர்த்தி

வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. 10

 

ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்

சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே. 11

 

இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை

உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். 12

 

முன் நிரை உறினும் அன்ன ஆகும். 13

 

நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால. 14

 

இயலசை ஈற்று முன் உரியசை வரினே

நிரையசை இயல ஆகும் என்ப. 15

 

அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. 16

 

ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப. 17

 

இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்

உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 18

 

வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே

வெண் சீர் அல்லா மூ அசை என்ப. 19

 

தன் பா அல் வழி தான் அடைவு இன்றே. 20

 

வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. 21

 

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்

இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே. 22

 

கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. 23

 

கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்

நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே. 24

 

வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. 25

 

இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்

அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே. 26

 

இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே

தளை வகை சிதையாத் தன்மையான. 27

 

வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. 28

 

இன் சீர் இயைய வருகுவது ஆயின்

வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே. 29

 

அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்

ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே. 30

 

நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே. 31

 

அடி உள்ளனவே தளையொடு தொடையே. 32

 

அடி இறந்து வருதல் இல் என மொழிப. 33

 

அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. 34

 

நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப. 35

 

ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. 36

 

பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே

ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. 37

 

மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 38

 

மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 39

 

சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது

நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும். 40

எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே

குன்றலும் மிகுதலுஸ்ம் இல் என மொழிப. 41

 

உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ

உயிர்த் திறம் இயக்கம் இன்மையான. 42

 

வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும். 43

 

தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே. 44

 

முச் சீரானும் வரும் இடன் உடைத்தே. 45

 

அசை கூன் ஆகும் அவ்வயினான. 46

 

சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. 47

 

ஐ வகை அடியும் விரிக்கும் காலை

மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்

எழுபது வகையின் வழு இல ஆகி

அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே. 48

 

ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே

பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை. 49

 

ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய. 50

 

விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே. 51

 

தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்

இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய

தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா. 52

 

சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்

ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும். 53

 

குறளடி முதலா அளவடி காறும்

உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப. 54

 

அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

தளை வகை ஒன்றாத் தன்மையான. 55

 

அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

இரு நெடிலடியும் கலியிற்கு உரிய. 56

 

நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்

வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப. 57

 

விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே. 58

 

இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்

நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே. 59

 

வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்

ஐஞ் சீர் அடியும் உள என மொழிப. 60

 

அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே. 61

 

எழு சீர் அடியே முடுகியல் நடக்கும். 62

 

முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும். 63

 

ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்

மூ வகை அடியும் முன்னுதல் இலவே. 64

 

ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்

தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப. 65

 

இடையும் வரையார் தொடை உணர்வோரே. 66

 

முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். 67

 

வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. 68

 

வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்

அசை சீர்த்து ஆகும் அவ் வழியான. 69

 

நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்

சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப. 70

 

நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்

வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர். 71

 

எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே. 72

 

வெண்பா இயலினும் பண்புற முடியும். 73

 

எழுத்து முதலா ஈண்டிய அடியின்

குறித்த பொருளை முடிய நாட்டல்

யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர். 74

 

பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்

வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர். 75

 

மரபேதானும்,

நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று. 76

 

அகவல் என்பது ஆசிரியம்மே. 77

 

அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. 78

 

துள்ளல் ஓசை கலி என மொழிப. 79

 

தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். 80

 

மருட்பா ஏனை இரு சார் அல்லது

தான் இது என்னும் தனிநிலை இன்றே. 81

 

அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார். 82

 

தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப. 83

 

மோனை எதுகை முரணே இயைபு என

நால் நெறி மரபின தொடை வகை என்ப. 84

 

அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். 85

 

பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்

அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே. 86

 

நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்

மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப. 87

 

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை. 88

 

அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும். 89

 

ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. 90

 

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. 91

 

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. 92

 

அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே. 93

 

ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்

பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே. 94

 

இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப. 95

 

சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்

சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப. 96

 

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே. 97

 

தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும். 98

 

தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப. 99

 

மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே. 100

 

ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என

நால் இயற்று என்ப பா வகை விரியே. 101

 

அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய

மும் முதல் பொருட்கும் உரிய என்ப. 102

 

பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்

ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு

ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. 103

 

ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடைத்தே கலி என மொழிப. 104

 

வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. 105

 

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப

பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. 106

 

வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே

செவியறிவுறூஉ என அவையும் அன்ன. 107

 

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்

தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று

ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே. 108

 

அவையடக்கியலே அரில் தபத் தெரியின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று

எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே. 109

 

செவியுறைதானே,

பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்

அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே. 110

 

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்

குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப. 111

 

குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். 112

 

மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்

செந்தூக்கு இயல என்மனார் புலவர். 113

 

நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே

கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு

ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. 114

 

கைக்கிளைதானே வெண்பா ஆகி

ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. 115

 

பரிபாடல்லே தொகை நிலை வகையின்

இது பா என்னும் இயல் நெறி இன்றி

பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப. 116

 

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக

காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். 117

 

சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்

அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். 118

 

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்

முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்

மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்

சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. 119

 

அங்கதம்தானே அரில் தபத் தெரியின்

செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. 120

 

செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. 121

 

மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். 122

 

செய்யுள்தாமே இரண்டு என மொழிப. 123

 

துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்

செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். 124

 

வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்

அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். 125

 

ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே

கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே. 126

 

அவற்றுள்,

ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும். 127

 

இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என

நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப. 128

 

தரவேதானும் நால் அடி இழிபு ஆய்

ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129

 

இடைநிலைப்பாட்டே,

தரவு அகப்பட்ட மரபினது என்ப. 130

 

அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்

நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி. 131

 

போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே

தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே

புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே. 132

 

ஏனை ஒன்றே,

தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே. 133

 

அதுவே,

வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே. 134

 

வண்ணகம்தானே,

தரவே தாழிசை எண்ணே வாரம் என்று

அந் நால் வகையின் தோன்றும் என்ப. 135

 

தரவேதானும்,

நான்கும் ஆறும் எட்டும் என்ற

நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும். 136

 

ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே

தரவின் சுருங்கித் தோன்றும் என்ப. 137

 

அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும். 138

 

முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. 139

 

எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே

சின்னம் அல்லாக் காலையான. 140

 

ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும். 141

 

கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று

ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். 142

 

தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்

தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்

எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்

அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்

யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது

கொச்சக ஒருபோகு ஆகும் என்ப. 143

 

ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே. 144

 

அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே

செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை. 145

 

எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்

அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே. 146

 

ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்

திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே. 147

 

தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்

ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்

வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்

பாநிலை வகையே கொச்சகக் கலி என

நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே. 148

 

கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்

போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே. 149

 

ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை

ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே. 150

 

நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே

குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே. 151

 

அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். 152

 

கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்

செவியறி வாயுறை புறநிலை என்று இவை

தொகு நிலை மரபின் அடி இல என்ப. 153

 

புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்

திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்

வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்

பண்புற முடியும் பாவின என்ப. 154

 

பரிபாடல்லே,

நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக

ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை. 155

 

அளவியல் வகையே அனை வகைப்படுமே. 156

 

எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

அடி வரை இல்லன ஆறு என மொழிப. 157

 

அவைதாம்,

நூலினான உரையினான

நொடியொடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய முதுமொழியான

மறை மொழி கிளந்த மந்திரத்தான

கூற்று இடை வைத்த குறிப்பினான. 158

 

அவற்றுள்,

நூல் எனப்படுவது நுவலும் காலை

முதலும் முடிவும் மாறுகோள் இன்றி

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து

நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. 159

 

அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. 160

 

ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்

இன மொழி கிளந்த ஓத்தினானும்

பொது மொழி கிளந்த படலத்தானும்

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று

ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. 161

 

அவற்றுள்,

சூத்திரம்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே. 162

 

நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது

ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர். 163

 

ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும். 164

 

மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்

தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப. 165

 

பாட்டு இடை வைத்த குறிப்பினானும்

பா இன்று எழுந்த கிளவியானும்

பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று

உரை வகை நடையே நான்கு என மொழிப.166

 

அதுவேதானும் இரு வகைத்து ஆகும். 167

 

ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே

ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே. 168

 

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவது கிளந்த துணிவினானும்

என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே.169

 

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப. 170

 

நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம் என்ப. 171

 

எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி

பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே. 172

 

பாட்டிடைக் கலந்த பொருள ஆகி

பாட்டின் இயல பண்ணத்திய்யே. 173

 

அதுவேதானும் பிசியொடு மானும். 174

 

அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்

அடி இகந்து வரினும் கடி வரை இன்றே. 175

 

கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்

அளவியல் வகையே அனை வகைப்படுமே. 176

 

கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்

முன் கிளந்தனவே முறையினான. 177

 

காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று

ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு

மறை என மொழிதல் மறையோர் ஆறே. 178

 

மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்

இவை முதலாகிய இயல் நெறி திரியாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே. 179

 

மெய் பெறும் அவையே கைகோள் வகையே. 180

 

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு

அளவு இயல் மரபின் அறு வகையோரும்

களவின் கிளவிக்கு உரியர் என்ப. 181

 

பாணன் கூத்தன் விறலி பரத்தை

ஆணம் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ

தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர். 182

 

ஊரும் அயலும் சேரியோரும்

நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்

கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது

கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும். 183

 

கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்

நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. 184

 

ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு

கண்டோர் மொழிதல் கண்டது என்ப. 185

 

இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன். 186

 

ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு

மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே. 187

 

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்

நினையும் காலை கேட்குநர் அவரே. 188

 

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. 189

 

பரத்தை வாயில் என இரு வீற்றும்

கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே. 190

 

வாயில் உசாவே தம்முள் உரிய. 191

 

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவை அல பிறவும் நுதலிய நெறியான்

சொல்லுந போலவும் கேட்குந போலவும்

சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர். 192

 

ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்

கரும நிகழ்ச்சி இடம் என மொழிப. 193

 

இறப்பே நிகழ்வே எதிரது என்னும்

திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர

பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். 194

 

இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்

தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே. 195

 

உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்

மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும். 196

 

எண் வகை இயல் நெறி பிழையாதாகி

முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே. 197

 

சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை

புல்லிய கிளவி எச்சம் ஆகும். 198

 

இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று

அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம். 199

 

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி

இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது

பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப. 200

 

அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்

பிற அவண் வரினும் திறவதின் நாடி

தம்தம் இயலின் மரபொடு முடியின்

அத் திறம்தானே துறை எனப்படுமே. 201

 

அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்

இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்

மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின். 202

 

மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி

உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே. 203

 

வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. 204

 

அவைதாம்,

பாஅ வண்ணம் தாஅ வண்ணம்

வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்

இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்

நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்

சித்திர வண்ணம் நலிபு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்

ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்

எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்

தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்

உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று

ஆங்கு என மொழிப அறிந்திசினோரே. 205

 

அவற்றுள்,

பாஅ வண்ணம்

சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். 206

 

தாஅ வண்ணம்

இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். 207

 

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. 208

 

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 209

 

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 210

 

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 211

 

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். 212

 

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். 213

 

சித்திர வண்ணம்

நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே. 214

 

நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். 215

 

அகப்பாட்டு வண்ணம்

முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. 216

 

புறப்பாட்டு வண்ணம்

முடிந்தது போன்று முடியாதாகும். 217

 

ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். 218

 

ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். 219

 

எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். 220

 

அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். 221

 

தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். 222

 

ஏந்தல் வண்ணம்

சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும். 223

 

உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 224

 

முடுகு வண்ணம்

அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே.225

 

வண்ணம்தாமே இவை என மொழிப. 226

 

வனப்பு இயல்தானே வகுக்கும் காலை

சில் மென் மொழியான் தாய பனுவலின்

அம்மைதானே அடி நிமிர்வு இன்றே. 227

 

செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்

அவ் வகைதானே அழகு எனப்படுமே. 228

 

தொன்மைதானே

உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. 229

 

இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்

தோல் என மொழிப தொல் மொழிப் புலவர். 230

 

விருந்தேதானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. 231

 

ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்

புள்ளி இறுதி இயைபு எனப்படுமே. 232

 

சேரி மொழியான் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. 233

 

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது

குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்

இழைபின் இலக்கணம் இயைந்ததாகும். 234

 

செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி

இழைத்த இலக்கணம் பிழைத்தன போல

வருவ உள எனினும் வந்தவற்று இயலான்

திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.235

 

 

 

9. மரபியல்

 

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1

 

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்

சேவும் சேவலும் இரலையும் கலையும்

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்

போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்

யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2

 

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்

மூடும் நாகும் கடமையும் அளகும்

மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்

அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3

 

அவற்றுள்,

பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை. 4

 

தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. 5

 

மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு

ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6

 

பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7

 

நாயே பன்றி புலி முயல் நான்கும்

ஆயும் காலை குருளை என்ப. 8

 

நரியும் அற்றே நாடினர் கொளினே. 9

 

குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10

 

பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை

கொள்ளும் காலை நாய் அலங்கடையே. 11

 

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்

ஓடும் புல்வாய் உளப்பட மறியே. 12

 

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. 13

 

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்

அவையும் அன்ன அப் பாலான. 14

 

யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்

மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. 15

 

எருமையும் மரையும் வரையார் ஆண்டே. 16

 

கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. 17

 

ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். 18

 

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 19

 

ஆவும் எருமையும் அது சொலப்படுமே. 20

 

கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். 21

 

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்

நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய. 22

 

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை

கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

 

பிள்ளை குழவி கன்றே போத்து எனக்

கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24

 

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25

 

சொல்லிய மரபின் இளமைதானே

சொல்லும் காலை அவை அல இலவே. 26

 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27

 

புல்லும் மரனும் ஓர் அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28

 

நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29

 

சிதலும் எறும்பும் மூ அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30

 

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31

 

மாவும் மாக்களும் ஐ அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32

 

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33

 

ஒரு சார் விலங்கும் உள என மொழிப. 34

 

வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல். 35

 

கேழற்கண்ணும் கடி வரை இன்றே. 36

 

புல்வாய் புலி உழை மரையே கவரி

சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும். 37

 

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 38

 

ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும். 39

 

பன்றி புல்வாய் உழையே கவரி

என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய. 40

 

எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 41

 

கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே. 42

 

பெற்றம் எருமை புலி மரை புல்வாய்

மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. 43

 

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய. 44

 

மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். 45

 

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 46

 

கலை என் காட்சி உழைக்கும் உரித்தே

நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும். 47

 

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்

யாத்த என்ப யாட்டின்கண்ணே. 48

 

சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்

மா இருந் தூவி மயில் அலங்கடையே. 49

 

ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்

ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப. 50

 

ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய

பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய

காண்ப அவை அவை அப்பாலான. 51

 

பிடி என் பெண் பெயர் யானை மேற்றே. 52

 

ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை

பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. 53

 

புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப. 54

 

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். 55

 

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை

சூழும் காலை அளகு எனல் அமையா. 56

 

அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 57

 

புல்வாய் நவ்வி உழையே கவரி

சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே. 58

 

பன்றி புல்வாய் நாய் என மூன்றும்

ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை. 59

 

பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. 60

 

பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. 61

 

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. 62

 

எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 63

 

நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே. 64

 

மூடும் கடமையும் யாடு அல பெறாஅ. 65

 

பாட்டி என்ப பன்றியும் நாயும். 66

 

நரியும் அற்றே நாடினர் கொளினே. 67

 

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. 68

 

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்

மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்

செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்

வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்

குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்

இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்

எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்

முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்

கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே. 69

 

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. 70

 

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71

 

படையும் கொடியும் குடையும் முரசும்

நடை நவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72

 

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு

ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73

 

பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்

நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்

பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே. 74

 

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்

யாரும் சார்த்தி அவை அவை பெறுமே. 75

தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய

நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப. 76

 

இடை இரு வகையோர் அல்லது நாடின்

படை வகை பெறாஅர் என்மனார் புலவர். 77

 

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 78

 

மெய் தெரி வகையின் எண் வகை உணவின்

செய்தியும் வரையார் அப் பாலான. 79

 

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. 80

 

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி. 81

 

வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. 82

 

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. 83

 

வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் மாலையும் தேரும் மாவும்

மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. 84

 

அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85

 

புறக் காழனவே புல் என மொழிப. 86

 

அகக் காழனவே மரம் என மொழிப. 87

 

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்

புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88

 

இலையே தளிரே முறியே தோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்

மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89

 

காயே பழமே தோலே செதிளே

வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90

 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்

திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும். 91

 

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை

மரபு வழிப் பட்ட சொல்லினானே. 92

 

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும். 93

 

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான. 94

 

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி

உரை படு நூல்தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின. 95

 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96

 

வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். 97

 

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். 98

 

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே. 99

 

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை

மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி

ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்

முப்பத்திரு வகை உத்தியொடு புணரின்

நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர். 100

 

உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்

புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்

விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு

புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே. 101

 

மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு

சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி

சொல்லும் காலை உரை அகத்து அடக்கி

நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி

துளக்கல் ஆகாத் துணைமை எய்தி

அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி

பல வகையானும் பயன் தெரிபு உடையது

சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர். 102

 

பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்

கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும். 103

 

விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி

சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா

ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்

மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே. 104

 

சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற

இன்றியமையாது இயைபவை எல்லாம்

ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே. 105

 

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்

தன் நூலானும் முடிந்த நூலானும்

ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி

தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ

துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். 106

 

சொல்லப்பட்டன எல்லா மாண்பும்

மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே. 107

 

சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே. 108

 

முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும்

வல்லோன் புணரா வாரம் போன்றே. 109

 

சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்

கூறியது கூறல் மாறு கொளக் கூறல்

குன்றக் கூறல் மிகை படக் கூறல்

பொருள் இல கூறல் மயங்கக் கூறல்

கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்

பழித்த மொழியான் இழுக்கம் கூறல்

தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்

என்ன வகையினும் மனம் கோள் இன்மை

அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். 110

 

எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே. 111

 

ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்

நுதலியது அறிதல் அதிகார முறையே

தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்

மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்

மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்

வாராததனான் வந்தது முடித்தல்

வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்

முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே

ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்

தன் கோள் கூறல் முறை பிறழாமை

பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்

இறந்தது காத்தல் எதிரது போற்றல்

மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்

தான் குறியிடுதல் ஒருதலை அன்மை

முடிந்தது காட்டல் ஆணை கூறல்

பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்

தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்

மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்

பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்

பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்

சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்

தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்

உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்

சொல்லிய அல்ல பிற அவண் வரினும்

சொல்லிய வகையான் சுருங்க நாடி

மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு

இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

நுனித்தகு புலவர் கூறிய நூலே. 112

 

 

பொருளதிகாரம் முற்றிற்று