தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம்

 

 

சிறப்புப்பாயிரம்

 

வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்

நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15

 

முதல் பாகம் - எழுத்ததிகாரம்

 

 

 

1. நூல் மரபு

 

எழுத்து எனப்படுப

அகரம் முதல்

னகர இறுவாய் முப்பஃது என்ப

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1

 

அவைதாம்,

குற்றியலிகரம் குற்றியலுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2

 

அவற்றுள்,

அ இ உ

எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்

ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3

 

ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்

ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4

 

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5

 

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6

 

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7

 

ஔகார இறுவாய்ப்

பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.8

 

னகார இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9

 

மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10

 

மெய்யின் அளபே அரை என மொழிப. 11

 

அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12

 

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகும் தெரியும் காலை. 13

 

உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14

 

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15

 

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16

 

புள்ளி இல்லா எல்லா மெய்யும்

உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்

ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்

ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17

 

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18

 

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19

 

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20

 

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21

 

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்

மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22

 

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்

க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23

 

அவற்றுள்,

ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24

 

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்

தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25

 

அவற்றுள்,

ண னஃகான் முன்னர்

க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26

 

ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்

யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27

 

மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28

 

ய ர ழ என்னும் புள்ளி முன்னர்

முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29

 

மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்

தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30

 

அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31

 

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32

 

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்

உள என மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர். 33

 

 

 

2. மொழி மரபு

 

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்

யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு

ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1

 

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே

உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2

 

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்

குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3

 

இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே

கடப்பாடு அறிந்த புணரியலான. 4

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5

 

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6

 

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அஃகாக் காலையான. 7

 

குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்

நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8

 

ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு

இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9

 

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10

 

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11

 

ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி

இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12

 

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13

 

தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்

மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14

 

ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற

க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15

 

அவற்றுள்,

ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16

 

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்

தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17

 

செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்

னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18

 

னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19

 

மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்

எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20

 

அகர இகரம் ஐகாரம் ஆகும். 21

 

அகர உகரம் ஔகாரம் ஆகும். 22

 

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23

 

ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே

தேரும் காலை மொழிவயினான. 24

 

இகர யகரம் இறுதி விரவும். 25

 

பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26

 

உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27

 

க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28

 

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே

அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29

 

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்

வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30

 

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31

 

ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32

 

முதலா ஏன தம் பெயர் முதலும். 33

 

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34

 

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது

அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35

 

உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36

 

க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37

 

எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38

 

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39

 

ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40

 

உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41

 

உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42

 

உப் பகாரம் ஒன்று என மொழிப

இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43

 

எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44

 

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்

அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45

 

உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46

 

உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே

அப் பொருள் இரட்டாது இவணையான. 47

 

வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48

 

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப

புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49

 

 

 

3. பிறப்பியல்

 

உந்தி முதலா முந்து வளி தோன்றி

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்

உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லும் காலை

பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல

திறப்படத் தெரியும் காட்சியான. 1

 

அவ் வழி,

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2

 

அவற்றுள்,

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3

 

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்

அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன

அவைதாம்,

அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4

 

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்

அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5

 

தம்தம் திரிபே சிறிய என்ப. 6

 

ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7

 

சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8

 

டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9

 

அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10

 

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்

நா நுனி பரந்து மெய் உற ஒற்ற

தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11

 

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

 

நுனி நா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

 

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

 

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15

 

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16

 

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை

கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17

 

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்

சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்

மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18

 

சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்

தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்

தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி

ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19

 

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில் தப நாடி

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20

 

அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே.21

 

 

 

4. புணரியல்

 

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்

இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது

அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

மெய்யே உயிர் என்று ஆயீர் இயல. 1

 

அவற்றுள்,

மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு-நிலையல். 2

 

குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3

 

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4

 

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்

மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று

இவ் என அறியக் கிளக்கும் காலை

நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று

ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5

 

அவற்றுள்,

நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு

குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய

பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்

பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்

தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்

தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்

மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என

ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. 6

 

அவைதாம்,

மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று

இவ் என மொழிப திரியும் ஆறே. 7

 

நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும்

அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய. 8

 

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்

உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே. 9

 

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்

வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்

எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்

ஒழுக்கல் வலிய புணரும் காலை. 10

 

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்

அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே. 11

 

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு

ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். 12

 

ஆறன் உருபின் அகரக் கிளவி

ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும். 13

 

வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. 14

 

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று

ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15

 

அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. 16

 

அவைதாம்,

இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன் என் கிளவி உளப்பட பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே. 17

 

அவற்றுள்,

இன்னின் இகரம் ஆவின் இறுதி

முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும். 18

 

அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை

னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே. 19

 

வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன்

அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. 20

 

னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு. 21

 

ஆனின் னகரமும் அதன் ஓரற்றே

நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே. 22

 

அத்தின் அகரம் அகர முனை இல்லை. 23

 

இக்கின் இகரம் இகர முனை அற்றே. 24

 

ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். 25

 

எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி

அக்கின் இறுதி மெய்ம் மிசையொடும் கெடுமே

குற்றியலுகரம் முற்றத் தோன்றாது. 26

 

அம்மின் இறுதி க ச தக் காலை

தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும். 27

மென்மையும் இடைமையும் வரூஉம் காலை

இன்மை வேண்டும் என்மனார் புலவர். 28

 

இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு

இன் என் சாரியை இன்மை வேண்டும். 29

 

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப

வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்

தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி

சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது

இடை நின்று இயலும் சாரியை இயற்கை

உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். 30

 

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்

ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே

அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. 31

 

காரமும் கரமும் கானொடு சிவணி

நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. 32

 

அவற்றுள்,

கரமும் கானும் நெட்டெழுத்து இலவே. 33

 

வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. 34

 

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். 35

 

புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது

மெய்யொடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே. 36

 

மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும். 37

 

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38

 

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39

 

அவைதாம்,

முன்னப் பொருள புணர்ச்சிவாயின்

இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே. 40

 

 

 

5. தொகைமரபு

 

க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்

மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்

ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே

அன்ன மரபின் மொழிவயினான. 1

 

ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்

உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட

அன்றி அனைத்தும் எல்லா வழியும்

நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே. 2

 

அவற்றுள்,

மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்

சொல்லிய தொடர்மொழி இறுதியான. 3

 

ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும்

வினை ஓரனைய என்மனார் புலவர். 4

 

மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்

வரு வழி நின்ற ஆயிரு புள்ளியும்

வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே. 5

 

வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி

மேற் கூறு இயற்கை ஆவயினான. 6

 

ல ன என வரூஉம் புள்ளி முன்னர்

த ந என வரின் ற ன ஆகும்மே. 7

 

ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும். 8

 

உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று

ஆயீர் இயல வல்லெழுத்து வரினே. 9

 

ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்

ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்

குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட

முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 10

 

உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்

புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்

எல்லா வழியும் இயல்பு என மொழிப. 11

 

அவற்றுள்,

இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. 12

 

அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. 13

 

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்

மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்

அம் முறை இரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

 

மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்

வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்

இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்

உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்

சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்

சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்

சாரியை இயற்கை உறழத் தோன்றலும்

உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்

அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்

மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்

அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்

மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்

ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப. 15

 

வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்

ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய

அவைதாம்,

இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்

உறழ் ஆகுநவும் என்மனார் புலவர். 16

 

சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்

எகர முதல் வினாவின் இகர இறுதியும்

சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்

யா என் வினாவின் ஐ என் இறுதியும்

வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்

சொல்லிய மருங்கின் உள என மொழிப. 17

 

நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்

குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும்

அறியத் தோன்றிய நெறி இயல் என்ப. 18

 

ஆறன் உருபினும் நான்கன் உருபினும்

கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை

ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்

நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன. 19

 

நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. 20

 

உகரமொடு புணரும் புள்ளி இறுதி

யகரமும் உயிரும் வரு வழி இயற்கை. 21

 

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி

அளவும் நிறையும் எண்ணும் சுட்டி

உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்

தம்தம் கிளவி தம் அகப்பட்ட

முத்தை வரூஉம் காலம் தோன்றின்

ஒத்தது என்ப ஏ என் சாரியை. 22

 

அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு

புரைவது அன்றால் சாரியை இயற்கை. 23

 

குறை என் கிளவி முன் வரு காலை

நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. 24

 

குற்றியலுகரக்கு இன்னே சாரியை. 25

 

அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. 26

 

பனை என் அளவும் கா என் நிறையும்

நினையும் காலை இன்னொடு சிவணும். 27

 

அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே

அவைதாம்,

க ச த ப என்றா ந ம வ என்றா

அகர உகரமொடு அவை என மொழிப. 28

 

ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக்

கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்

மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி

ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே. 29

 

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்

பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை

ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்

மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30

 

 

 

6. உருபியல்

 

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்

அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர்

வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. 1

 

பல்லவை நுதலிய அகர இறு பெயர்

வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. 2

 

யா என் வினாவும் ஆயியல் திரியாது. 3

 

சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி

ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே. 4

 

சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி

வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. 5

 

யா என் வினாவின் ஐ என் இறுதியும்

ஆயியல் திரியாது என்மனார் புலவர்

ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே. 6

 

நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்

ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. 7

 

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. 8

 

அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு

அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. 9

 

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. 10

 

சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்

கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. 11

 

ஏனை வகரம் இன்னொடு சிவணும். 12

 

மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. 13

 

இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. 14

 

நூம் என் இறுதி இயற்கை ஆகும். 15

 

தாம் நாம் என்னும் மகர இறுதியும்

யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன

ஆ எ ஆகும் யாம் என் இறுதி

ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்

ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். 16

எல்லாம் என்னும் இறுதி முன்னர்

வற்று என் சாரியை முற்றத் தோன்றும்

உம்மை நிலையும் இறுதியான. 17

 

உயர்திணை ஆயின் நம் இடை வருமே. 18

 

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்

எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்

ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப

நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி

உம்மை நிலையும் இறுதியான

தம் இடை வரூஉம் படர்க்கை மேன

நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. 19

 

தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்

மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. 20

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்

அத்தும் இன்னும் உறழத் தோன்றல்

ஒத்தது என்ப உணருமோரே. 21

 

அன் என் சாரியை ஏழன் இறுதி

முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப. 22

 

குற்றியலுகரத்து இறுதி முன்னர்

முற்றத் தோன்றும் இன் என் சாரியை. 23

 

நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்

அப் பால் மொழிகள் அல் வழியான. 24

 

அவைதாம்,

இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 25

 

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். 26

 

ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்

எல்லா எண்ணும் சொல்லும் காலை

ஆன் இடை வரினும் மானம் இல்லை

அஃது என் கிளவி ஆவயின் கெடுமே

உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. 27

 

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய

ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்

ஆய்தம் கெடுதல் ஆவயினான. 28

 

ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்

சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்

ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே. 29

 

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்

சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்

தேரும் காலை உருபொடு சிவணி

சாரியை நிலையும் கடப்பாடு இலவே. 30

 

 

 

7. உயிர்மயங்கியல்

 

அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்

வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்

தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே. 1

 

வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்

என என் எச்சமும் சுட்டின் இறுதியும்

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. 2

 

சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்

ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும். 3

 

ய வ முன் வரினே வகரம் ஒற்றும். 4

 

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 5

 

நீட வருதல் செய்யுளுள் உரித்தே. 6

 

சாவ என்னும் செய என் எச்சத்து

இறுதி வகரம் கெடுதலும் உரித்தே. 7

 

அன்ன என்னும் உவமக் கிளவியும்

அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்

செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்

ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்

செய்த என்னும் பெயரெஞ்சுகிளவியும்

செய்யிய என்னும் வினையெஞ்சுகிளவியும்

அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்

பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட

அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 8

 

வாழிய என்னும் செய என் கிளவி

இறுதி யகரம் கெடுதலும் உரித்தே. 9

 

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். 10

 

பலவற்று இறுதி நீடு மொழி உளவே

செய்யுள் கண்ணிய தொடர்மொழியான. 11

 

தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்

லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே. 12

 

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். 13

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 14

 

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 15

 

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. 16

 

அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே. 17

 

பலவற்று இறுதி உருபு இயல் நிலையும். 18

 

ஆகார இறுதி அகர இயற்றே. 19

 

செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்

அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 20

 

உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி

மெய்ம்மையாக அகரம் மிகுமே. 21

 

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்

யா என் வினாவும் பலவற்று இறுதியும்

ஏவல் குறித்த உரையசை மியாவும்

தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு

அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 22

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 23

 

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்

அறியத் தோன்றும் அகரக் கிளவி. 24

 

இரா என் கிளவிக்கு அகரம் இல்லை. 25

 

நிலா என் கிளவி அத்தொடு சிவணும். 26

 

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்

ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. 27

 

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28

 

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்

ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன

அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா

னகரம் ஒற்றும் ஆவும் மாவும் 29

 

ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. 30

 

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்

தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. 31

 

குறியதன் இறுதிச் சினை கெட உகரம்

அறிய வருதல் செய்யுளுள் உரித்தே. 32

 

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 33

 

இனி அணி என்னும் காலையும் இடனும்

வினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன. 34

 

இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி

நின்ற இகரம் உகரம் ஆதல்

தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. 35

 

சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. 36

 

பதக்கு முன் வரினே தூணிக் கிளவி

முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. 37

 

உரி வரு காலை நாழிக் கிளவி

இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே

டகாரம் ஒற்றும் ஆவயினான. 38

 

பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு

அத்தும் இன்னும் சாரியை ஆகும். 39

 

வளி என வரூஉம் பூதக் கிளவியும்

அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 40

 

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41

 

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 42

 

ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43

 

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை

ஒல்வழி அறிதல் வழக்கத்தான. 44

 

நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு

ஆன் இடை வருதல் ஐயம் இன்றே.45

 

திங்கள் முன் வரின் இக்கே சாரியை. 46

 

ஈகார இறுதி ஆகார இயற்றே. 47

 

நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்

மீ என மரீஇய இடம் வரை கிளவியும்

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 48

 

இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்

உடன் நிலை மொழியும் உள என மொழிப. 49

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 50

 

நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 51

 

உகர இறுதி அகர இயற்றே.52

 

சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். 53

 

ஏனவை வரினே மேல் நிலை இயல்பே. 54

 

சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. 55

 

அன்று வரு காலை ஆ ஆகுதலும்

ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்

செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப. 56

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 57

 

எருவும் செருவும் அம்மொடு சிவணி

திரிபு இடன் உடைய தெரியும் காலை

அம்மின் மகரம் செருவயின் கெடுமே

தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. 58

 

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே

உகரம் வருதல் ஆவயினான. 59

 

ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே. 60

 

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்

ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை. 61

ஊகார இறுதி ஆகார இயற்றே. 62

 

வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்

நினையும் காலை அவ் வகை வரையார். 63

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 64

 

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்

நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. 65

 

பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 66

 

ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். 67

 

அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே

தக்க வழி அறிதல் வழக்கத்தான. 68

 

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்

இன் இடை வரினும் மானம் இல்லை.- 69

 

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா

முன்னிலை மொழிய என்மனார் புலவர்

தேற்றமும் சிறப்பும் அல் வழியான. 70

 

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்

மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா. 71

 

ஏகார இறுதி ஊகார இயற்றே. 72

 

மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்

கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 73

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 74

 

ஏ என் இறுதிக்கு எகரம் வருமே. 75

 

சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. 76

 

பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். 77

 

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 78

 

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். 79

 

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்

ஆ முப் பெயரும் சேமர இயல. 80

 

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்

நினையும் காலை அம்மொடு சிவணும்

ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே

மெய் அவண் ஒழிய என்மனார் புலவர். 81

 

பனையின் முன்னர் அட்டு வரு காலை

நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே

ஆகாரம் வருதல் ஆவயினான. 82

 

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப

கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி. 83

 

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. 84

 

மழை என் கிளவி வளி இயல் நிலையும். 85

 

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஐ என் இறுதி அவா முன் வரினே

மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்

டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். 86

 

ஓகார இறுதி ஏகார இயற்றே. 87

 

மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்

கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 88

 

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே.89

 

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

ஒகரம் வருதல் ஆவயினான. 90

 

இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். 91

 

உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 92

 

ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும்

வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே

அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்

செவ்விது என்ப சிறந்திசினோரே. 93

 

 

 

8. புள்ளிமயங்கியல்

 

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்

வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே

உகரம் வருதல் ஆவயினான. 1

 

ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். 2

 

நகர இறுதியும் அதன் ஓரற்றே. 3

 

வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். 4

 

வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி

வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை. 5

 

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 6

 7 ?? RESTORE FROM BK ??

 

ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. 8

 

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 9

 

விண் என வரூஉம் காயப் பெயர்வயின்

உண்மையும் உரித்தே அத்து என் சாரியை

செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை. 10

 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.11

 

கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. 12

 

வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்

வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே. 13

 

முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். 14

 

மகர இறுதி வேற்றுமை ஆயின்

துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. 15

 

அகர ஆகாரம் வரூஉம் காலை

ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே. 16

 

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே

செல் வழி அறிதல் வழக்கத்தான. 17

 

இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. 18

 

அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். 19

 

அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே

முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்

வரை நிலை இன்றே ஆசிரியர்க்க

மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. 20

 

இலம் என் கிளவிக்குப் படு வரு காலை

நிலையலும் உரித்தே செய்யுளான. 21

 

அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி

ஒத்த எண்ணு முன் வரு காலை.22

 

அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே. 23

 

அளவும் நிறையும் வேற்றுமை இயல. 24

 

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்

தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்

வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும்

மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. 25

 

அல்லது கிளப்பின் இயற்கை ஆகும். 26

 

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்

எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும்

வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது. 27

 

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28

 

உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும். 29

 

நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. 30

 

அல்லதன் மருங்கின் சொல்லும் காலை

உக் கெட நின்ற மெய்வயின் ஈ வர

இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம்

நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே

அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும். 31

 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 32

 

ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்

ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன. 33

 

வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை- 34

 

வகாரம் மிசையும் மகாரம் குறுகும். 35

 

நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன

அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே

ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர். 36

 

னகார இறுதி வல்லெழுத்து இயையின்

றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே. 37

 

மன்னும் சின்னும் ஆனும் ஈனும்

பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர்.38

 

சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும்

அப் பண்பு நிலையும் இயற்கைய என்ப. 39

 

குயின் என் கிளவி இயற்கை ஆகும். 40

 

எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. 41

 

ஏனை எகினே அகரம் வருமே

வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். 42

 

கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல. 43

 

மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. 44

 

தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்

மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை. 45

 

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 46

 

மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும். 47

 

இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். 48

 

ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. 49

 

மின்னும் பின்னும் பன்னும் கன்னும்

அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல. 50

 

வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு

தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி. 51

 

இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்

முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்

மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே. 52

 

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு

பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே. 53

 

சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும். 54

 

அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே

நிற்றலும் உரித்தே அம் என் சாரியை

மக்கள் முறை தொகூஉம் மருங்கினான. 55

 

தானும் பேனும் கோனும் என்னும்

ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே. 56

 

தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும். 57

 

வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்

தோற்றம் இல்லை என்மனார் புலவர். 58

 

அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே. 59

 

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்

இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல்

தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே. 60

 

பொன் என் கிளவி ஈறு கெட முறையின்

முன்னர்த் தோன்றும் லகார மகாரம்

செய்யுள் மருங்கின் தொடர் இயலான. 61

 

யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்

வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே. 62

 

தாய் என் கிளவி இயற்கை ஆகும். 63

 

மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே.64

 

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. 65

 

அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப. 66

 

ரகார இறுதி யகார இயற்றே. 67

 

ஆரும் வெதிரும் சாரும் பீரும்

மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும். 68

 

சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும். 69

 

பீர் என் கிளவி அம்மொடும் சிவணும். 70

 

லகார இறுதி னகார இயற்றே. 71

 

மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும். 72

 

அல்வழி எல்லாம் உறழ் என மொழிப. 73

 

தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும்

புகர் இன்று என்மனார் புலமையோரே. 74

 

நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. 75

 

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்

அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல. 76

 

இல் என் கிளவி இன்மை செப்பின்

வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும்

இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்

கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே. 77

 

வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. 78

 

நாயும் பலகையும் வரூஉம் காலை

ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே

உகரம் கெடு வழி அகரம் நிலையும்.- 79

 

பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு

ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே. 80

 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 81

 

வெயில் என் கிளவி மழை இயல் நிலையும். 82

 

சுட்டு முதல் ஆகிய வகர இறுதி

முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும். 83

 

வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். 84

 

மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும். 85

 

ஏனவை புணரின் இயல்பு என மொழிப. 86

ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே. 87

 

ழகார இறுதி ரகார இயற்றே. 88

 

தாழ் என் கிளவி கோலொடு புணரின்

அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும். 89

 

தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே. 90

 

குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்

பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும். 91

 

பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே. 92

 

ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும். 93

 

அளவும் நிறையும் எண்ணும் வரு வழி

நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்

கடி நிலை இன்றே ஆசிரியர்க்க. 94

 

பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி. 95

 

ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.- 96

 

நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்

கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே. 97

 

ஐ அம் பல் என வரூஉம் இறுதி

அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். 98

 

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 99

 

கீழ் என் கிளவி உறழத் தோன்றும். 100

 

ளகார இறுதி ணகார இயற்றே.-- 101

 

மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும். 102

 

அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.- 103

 

ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே

தகரம் வரூஉம் காலையான. 104

 

நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்

வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்

போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே. 105

 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 106

 

இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும். 107

 

புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.- 108

 

மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி

தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே. 109

 

உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்

கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே.110

 

 

 

9. குற்றியலுகரப்புணரியல்

 

ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்

ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்

ஆயிரு மூன்றே உகரம் குறுகு இடன். 1

 

அவற்றுள்,

ஈர் ஒற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா.2

 

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்

எல்லா இறுதியும் உகரம் நிறையும். 3

 

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழி

தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே. 4

 

யகரம் வரு வழி இகரம் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது. 5

 

ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்

வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக

தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. 6

 

ஒற்று இடை இனம் மிகா மொழியுமார் உளவே

அத் திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே. 7

 

இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும்

நடை ஆயியல என்மனார் புலவர். 8

 

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும்

வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே

மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம்

வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும். 9

 

மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.-- 10

 

மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே. 11

 

ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்

அம் இடை வரற்கும் உரியவை உளவே

அம் மரபு ஒழுகும் மொழிவயினான 12

 

ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம்

அக் கிளைமொழியும் உள என மொழிப. 13

 

எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும். 14

 

வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். 15

 

பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார். 16

 

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய

ஆய்த இறுதியும் உருபு இயல் நிலையும். 17

 

முன் உயிர் வரும் இடத்து ஆய்தப் புள்ளி

மன்னல் வேண்டும் அல்வழியான. 18

 

ஏனை முன் வரினே தான் நிலை இன்றே. 19

 

அல்லது கிளப்பின் எல்லா மொழியும்

சொல்லிய பண்பின் இயற்கை ஆகும். 20

 

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. 21

 

சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும்

யா வினா முதலிய மென்றொடர் மொழியும்

ஆயியல் திரியா வல்லெழுத்து இயற்கை. 22

 

யா வினா மொழியே இயல்பும் ஆகும். 23

 

அந் நால் மொழியும் தம் நிலை திரியா. 24

உண்டு என் கிளவி உண்மை செப்பின்

முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும்

மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்

ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து வரூஉம் காலையான. 25

 

இரு திசை புணரின் ஏ இடை வருமே. 26

 

திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும்

கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்

ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும்

தெற்கொடு புணரும் காலையான. 27

 

ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி

எல்லா எண்ணும் பத்தன் முன் வரின்

குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே

முற்ற இன் வரூஉம் இரண்டு அலங்கடையே. 28

 

பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல்

ஒத்தது என்ப இரண்டு வரு காலை. 29

 

ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. 30

 

நிறையும் அளவும் வரூஉம் காலையும்

குறையாது ஆகும் இன் என் சாரியை. 31

 

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர்

நின்ற பத்தன் ஒற்றுக் கெட ஆய்தம்

வந்து இடை நிலையும் இயற்கைத்து என்ப

கூறிய இயற்கை குற்றியலுகரம்

ஆறன் இறுதி அல் வழியான.32

 

முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும்

உகரம் வருதல் ஆவயினான. 33

 

இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு

நடை மருங்கு இன்றே பொருள்வயினான. 34

 

மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும்

மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும். 35

 

நான்கன் ஒற்றே றகாரம் ஆகும். 36

 

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும். 37

 

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும். 38

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும். 39

 

அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும்

கிளந்த இயல தோன்றும் காலை. 40

 

மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும். 41

 

ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும். 42

 

க ச த ப முதல் மொழி வரூஉம் காலை. 43

 

ந ம வ என்னும் மூன்றொடு சிவணி

அகரம் வரினும் எட்டன் முன் இயல்பே. 44

 

ஐந்தும் மூன்றும் ந ம வரு காலை

வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே. 45

 

மூன்றன் ஒற்றே வகாரம் வரு வழி

தோன்றிய வகாரத்து உரு ஆகும்மே. 46

 

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். 47

 

ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.- 48

 

முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை

தவல் என மொழிப உகரக் கிளவி

முதல் நிலை நீடல் ஆவயினான. 49

 

மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும்

தோன்றிய வகரத்து இயற்கை ஆகும். 50

 

மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே

உழக்கு என் கிளவி வழக்கத்தான. 51

 

ஆறு என் கிளவி முதல் நீடும்மே. 52

 

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது

இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே. 53

 

நூறு முன் வரினும் கூறிய இயல்பே. 54

 

மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும். 55

 

நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா. 56

 

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்தற்றே

முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்

நூறு என் கிளவி நகாரம் மெய் கெட

ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப

ஆயிடை வருதல் இகார ரகாரம்

ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும். 57

 

ஆயிரக் கிளவி வரூஉம் காலை

முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே. 58

 

முதல் நிலை நீடினும் மானம் இல்லை. 59

 

மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும். 60

 

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். 61

 

ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும். 62

 

ஆறன் மருங்கின் குற்றியலுகரம்

ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும். 63

 

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது

இன் பெறல் வேண்டும் சாரியை மரபே. 64

 

நூறாயிரம் முன் வரூஉம் காலை

நூறன் இயற்கை முதல் நிலைக் கிளவி. 65

 

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு

ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே. 66

 

அவை ஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும். 67

 

அளவும் நிறையும் ஆயியல் திரியா

குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும்

முன் கிளந்தன்ன என்மனார் புலவர். 68

 

ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி

ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே

நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும். 69

 

ஆயிரம் வரினே இன் ஆம் சாரியை

ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை. 70

 

அளவும் நிறையும் ஆயியல் திரியா. 71

 

முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும்

ஞ ந மத் தோன்றினும் ய வ வந்து இயையினும்

முதல் நிலை இயற்கை என்மனார் புலவர். 72

 

அதன் நிலை உயிர்க்கும் யா வரு காலை

முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே

ரகரத்து உகரம் துவரக் கெடுமே. 73

 

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர்

வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின்

மகர அளவொடு நிகரலும் உரித்தே. 74

 

ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன்

உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும்

அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி

செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும்

வேற்றுமை குறித்த பொருள்வயினான. 75

 

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி

குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி

நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியும்

உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்

ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும்

செய்யும் செய்த என்னும் கிளவியின்

மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும்

தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம்

எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்

அன்னவை எல்லாம் மருவின் பாத்திய

புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா. 76

 

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்

வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்

வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்

நன் மதி நாட்டத்து என்மனார் புலவர். 77

 

எழுத்ததிகாரம் முற்றிற்று    

 

                  

 

 

தொல்காப்பியம் - இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம்

 

 

1. கிளவியாக்கம்

 

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவர் அல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. 1

 

ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்

பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி

அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே. 2

 

ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று

ஆயிரு பாற்சொல் அஃறிணையவ்வே. 3

 

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்

இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும். 4

 

னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். 5

 

ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். 6

 

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்

மாரைக் கிளவி உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. 7

 

ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த

குன்றியலுகரத்து இறுதி ஆகும். 8

 

அ ஆ வ என வரூஉம் இறுதி

அப் பால் மூன்றே பல அறி சொல்லே. 9

 

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய

ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்

தோற்றம்தாமே வினையொடு வருமே. 10

 

வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்

பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்

மயங்கல் கூடா தம் மரபினவே. 11

 

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி

ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே. 12

 

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். 13

 

வினாவும் செப்பே வினா எதிர் வரினே. 14

 

செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே

அப் பொருள் புணர்ந்த கிளவியான. 15

 

செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு

அப் பொருள் ஆகும் உறழ் துணைப் பொருளே. 16

 

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்

பகுதிக் கிளவி வரை நிலை இலவே. 17

 

இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை

வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே. 18

 

இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல். 19

 

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். 20

 

ஆக்கம்தானே காரணம் முதற்றே. 21

 

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்

போக்கு இன்று என்ப வழக்கினுள்ளே. 22

 

பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி

தான் அறி பொருள்வயின் பன்மை கூறல். 23

 

உருபு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்

இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை. 24

 

தன்மை சுட்டலும் உரித்து என மொழிப

அன்மைக் கிளவி வேறு இடத்தான. 25

 

அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை

நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல். 26

 

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி

இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல. 27

 

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்

நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம் மூ இடத்தும் உரிய என்ப. 28

 

அவற்றுள்,

தரு சொல் வரு சொல் ஆயிரு கிளவியும்

தன்மை முன்னிலை ஆயீர் இடத்த. 29

 

ஏனை இரண்டும் ஏனை இடத்த.30

 

யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்

அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். 31

 

அவற்றுள்,

யாது என வரூஉம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்

தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே. 32

 

இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு

வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். 33

 

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. 34

 

எப் பொருள் ஆயினும் அல்லது இல் எனின்

அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல். 35

 

அப் பொருள் கூறின் சுட்டிக் கூறல். 36

 

பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும்

பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே. 37

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்

வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்

சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர். 38

 

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. 39

சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்

சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும். 40

 

சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்

இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். 41

 

ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி

தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே. 42

 

தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று

எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார். 43

 

ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்

ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது. 44

 

வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார். 45

 

வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார். 46

 

எண்ணுங்காலும் அது அதன் மரபே. 47

 

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா. 48

 

ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்

தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்

உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். 49

 

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்

மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. 50

 

பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்

அஃறிணை முடிபின செய்யுளுள்ளே. 51

 

வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்

வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல் என்று

ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல். 52

 

அவற்றுள்,

வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்

தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே. 53

 

ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும். 54

 

வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்

நினையும் காலை கிளந்தாங்கு இயலும். 55

 

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி. 56

 

குடிமை ஆண்மை இளமை மூப்பே

அடிமை வன்மை விருந்தே குழுவே

பெண்மை அரசே மகவே குழவி

தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி

காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று

ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்

உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்

அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும். 57

 

காலம் உலகம் உயிரே உடம்பே

பால் வரை தெய்வம் வினையே பூதம்

ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்

ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன

ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

பால் பிரிந்து இசையா உயர்திணை மேன. 58

 

நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே. 59

 

இசைத்தலும் உரிய வேறிடத்தான. 60

 

எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே. 61

 

கண்ணும் தோளும் முலையும் பிறவும்

பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி

பன்மை கூறும் கடப்பாடு இலவே

தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே. 62

 

 

 

2. வேற்றுமையியல்

 

வேற்றுமைதாமே ஏழ் என மொழிப. 1

 

விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே. 2

 

அவைதாம்,

பெயர் ஐ ஒடு கு

இன் அது கண் விளி என்னும் ஈற்ற. 3

 

அவற்றுள்,

எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. 4

 

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்

வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்

பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று

அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே. 5

 

பெயரின் ஆகிய தொகையுமார் உளவே

அவ்வும் உரிய அப்பாலான. 6

 

எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி

அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 7

 

கூறிய முறையின் உருபு நிலை திரியாது

ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப. 8

 

பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா

தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே. 9

 

இரண்டாகுவதே,

ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு

அவ் இரு முதலின் தோன்றும் அதுவே. 10

 

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்

ஒப்பின் புகழின் பழியின் என்றா

பெறலின் இழவின் காதலின் வெகுளியின்

செறலின் உவத்தலின் கற்பின் என்றா

அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்

நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா

ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்

நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா

அன்ன பிறவும் அம் முதற் பொருள

என்ன கிளவியும் அதன் பால என்மனார். 11

 

மூன்றாகுவதே,

ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே. 12

 

அதனின் இயறல் அதன் தகு கிளவி

அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்

அதனின் கோடல் அதனொடு மயங்கல்

அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி

அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி

அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை

இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 13

 

நான்காகுவதே,

கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 14

 

அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்

அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்

அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்

நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று

அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார். 15

 

ஐந்தாகுவதே,

இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

இதனின் இற்று இது என்னும் அதுவே. 16

 

வண்ணம் வடிவே அளவே சுவையே

தண்மை வெம்மை அச்சம் என்றா

நன்மை தீமை சிறுமை பெருமை

வன்மை மென்மை கடுமை என்றா

முதுமை இளமை சிறத்தல் இழித்தல்

புதுமை பழமை ஆக்கம் என்றா

இன்மை உடைமை நாற்றம் தீர்தல்

பன்மை சின்மை பற்று விடுதல் என்று

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17

 

ஆறாகுவதே,

அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி

தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்

அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே. 18

 

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்

செயற்கையின் முதுமையின் வினையின் என்றா

கருவியின் துணையின் கலத்தின் முதலின்

ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா

தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்

திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன

கூறிய மருங்கின் தோன்றும் கிளவி

ஆறன் பால என்மனார் புலவர். 19

 

ஏழாகுவதே,

கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி

வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்

அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. 20

 

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்

பின் சார் அயல் புடை தேவகை எனாஅ

முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 21

 

வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை

ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து

பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்

எல்லாச் சொல்லும் உரிய என்ப. 22

 

 

 

3. வேற்றுமைமயங்கியல்

 

கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு

உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை. 1

 

சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்

வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர். 2

 

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. 3

 

முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை

முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே. 4

 

முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை

சினை முன் வருதல் தெள்ளிது என்ப. 5

 

முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ

நுவலும் காலை சொற்குறிப்பினவே. 6

 

பிண்டப் பெயரும் ஆயியல் திரியா

பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே. 7

 

ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே. 8

 

மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய

ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி

நோக்கு ஓரனைய என்மனார் புலவர். 9

 

இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்

இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10

 

அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்

அது என் உருபு கெட குகரம் வருமே. 11

 

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்

கடி நிலை இலவே பொருள்வயினான. 12

 

ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்

வேற்றுமை தெரிப உணருமோரே. 13

 

ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்

தாம் பிரிவு இலவே தொகை வரு காலை. 14

 

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு

ஏழும் ஆகும் உறை நிலத்தான. 15

 

குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி

அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும், 16

 

அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்

எச்சம் இலவே பொருள்வயினான. 17

 

அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது

உருபினும் பொருளினும் மெய் தடுமாறி

இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்

திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே. 18

 

உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி

ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே. 19

 

இறுதியும் இடையும் எல்லா உருபும்

நெறி படு பொருள்வயின் நிலவுதல் வரையார். 20

 

பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்

நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப. 21

 

ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்

மெய் உருபு தொகாஅ இறுதியான. 22

 

யாதன் உருபின் கூறிற்று ஆயினும்

பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும். 23

 

எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின்

பொருள் நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. 24

 

கு ஐ ஆன் என வரூஉம் இறுதி

அவ்வொடு சிவணும் செய்யுளுள்ளே. 25

 

அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்

குவ்வும் ஐயும் இல் என மொழிப. 26

 

இதனது இது இற்று என்னும் கிளவியும்

அதனைக் கொள்ளும் பொருள்வயினானும்

அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும்

முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும்

பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்

காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்

பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும்

அன்ன பிறவும் நான்கன் உருபின்

தொல் நெறி மரபின தோன்றல் ஆறே. 27

 

ஏனை உருபும் அன்ன மரபின

மானம் இலவே சொல் முறையான. 28

 

வினையே செய்வது செயப்படுபொருளே

நிலனே காலம் கருவி என்றா

இன்னதற்கு இது பயன் ஆக என்னும்

அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ

ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29

 

அவைதாம்,

வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும். 30

 

முதலின் கூறும் சினை அறி கிளவியும்

சினையின் கூறும் முதல் அறி கிளவியும்

பிறந்தவழிக் கூறலும் பண்பு கொள் பெயரும்

இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும்

வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ

அனை மரபினவே ஆகுபெயர்க் கிளவி. 31

 

அவைதாம்,

தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்

ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும்

அப் பண்பினவே நுவலும் காலை. 32

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 33

 

அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி

உள என மொழிப உணர்ந்திசினோரே. 34

 

கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்

கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே. 35

 

 

 

4. விளிமரபு

 

விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு

தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. 1

 

அவ்வே,

இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப. 2

 

அவைதாம்,

இ உ ஐ ஓ என்னும் இறுதி

அப் பால் நான்கே உயர்திணை மருங்கின்

மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.3

 

அவற்றுள்,

இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும். 4

 

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். 5

 

உகரம்தானே குற்றியலுகரம். 6

 

ஏனை உயிரே உயர்திணை மருங்கின்

தாம் விளி கொள்ளா என்மனார் புலவர். 7

 

அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்

இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 8

 

முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி

ஆவொடு வருதற்கு உரியவும் உளவே. 9

 

அண்மைச் சொல்லே இயற்கை ஆகும். 10

 

ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப

புள்ளி இறுதி விளி கொள் பெயரே. 11

 

ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா. 12

 

அன் என் இறுதி ஆ ஆகும்மே. 13

 

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும். 14

 

ஆன் என் இறுதி இயற்கை ஆகும்.15

 

தொழிலின் கூறும் ஆன் என் இறுதி

ஆய் ஆகும்மே விளிவயினான. 16

 

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 17

 

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 18

 

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. 19

 

தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும்

யான் என் பெயரும் வினாவின் பெயரும்

அன்றி அனைத்தும் விளி கோள் இலவே. 20

 

ஆரும் அருவும் ஈரொடு சிவணும். 21

 

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்

வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே. 22

 

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 23

 

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 24

 

சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன. 25

 

நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று

அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும். 26

 

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே

நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். 27

 

அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும். 28

 

வினையினும் பண்பினும்

நினையத் தோன்றும் ஆள் என் இறுதி

ஆய் ஆகும்மே விளிவயினான. 29

 

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல. 30

 

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்

முன் கிளந்தன்ன என்மனார் புலவர். 31

 

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 32

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்

விளம்பிய நெறிய விளிக்கும் காலை. 33

 

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய

அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்

விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்

தெளி நிலை உடைய ஏகாரம் வரலே. 34

 

உள எனப்பட்ட எல்லாப் பெயரும்

அளபு இறந்தனவே விளிக்கும் காலை

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான. 35

 

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்

அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும்

விளியொடு கொள்ப தெளியுமோரே. 36

 

த ந நு எ என அவை முதல் ஆகித்

தன்மை குறித்த ன ர ள என் இறுதியும்

அன்ன பிறவும் பெயர் நிலை வரினே

இன்மை வேண்டும் விளியொடு கொளலே. 37

 

 

 

5. பெயரியல்

 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. 1

 

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர். 2

 

தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்

இரு பாற்று என்ப பொருண்மை நிலையே. 3

 

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4

 

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப. 5

 

அவற்றுள்,

பெயர் எனப்படுபவை தெரியும் காலை

உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம் மூ உருபின தோன்றல் ஆறே. 6

 

இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்

உரியவை உரிய பெயர்வயினான. 7

 

அவ்வழி,

அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்

அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்

அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்

யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்

யாவன் யாவள் யாவர் என்னும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த உயர்திணைப் பெயரே. 8

 

ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும்

பெண்மை அடுத்த மகள் என் கிளவியும்

பெண்மை அடுத்த இகர இறுதியும்

நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்

முறைமை சுட்டா மகனும் மகளும்

மாந்தர் மக்கள் என்னும் பெயரும்

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்

சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்

அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்

ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ

அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன. 9

 

எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர்.10

 

நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே

வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே

பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே

கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே

இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு

அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே. 11

 

அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 12

 

அது இது உது என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்

அவை இவை உவை என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய வகரப் பெயரும்

யாது யா யாவை என்னும் பெயரும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. 13

 

பல்ல பல சில என்னும் பெயரும்

உள்ள இல்ல என்னும் பெயரும்

வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்

இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்

ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட

அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன. 14

 

கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே

கொள் வழி உடைய பல அறி சொற்கே. 15

 

அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 16

 

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்

ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 17

 

இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்

திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்

நினையும் காலை தம்தம் மரபின்

வினையொடு அல்லது பால் தெரிபு இலவே. 18

 

நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்

உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே

அன்ன மரபின் வினைவயினான. 19

 

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி தாமே தானே

எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து

சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு

அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. 20

 

அவற்றுள்,

நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

 

அவைதாம்,

பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்

பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று

அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே. 22

 

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்

பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே. 23

 

பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே. 24

 

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25

பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 26

 

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. 27

 

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றே பலவே ஒருவர் என்னும்

என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே. 28

 

ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. 29

 

தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே. 30

 

தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 31

 

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி

பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே 32

 

தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது

உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. 33

 

நீயிர் நீ என வரூஉம் கிளவி

பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள. 34

 

அவற்றுள்,

நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 35

 

ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. 36

 

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை. 37

 

தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும். 38

 

இன்ன பெயரே இவை எனல் வேண்டின்

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். 39

 

மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி

மகடூஉ இயற்கை தொழில்வயினான. 40

 

ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே

ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே. 41

 

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்

இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா

நிலத்துவழி மருங்கின் தோன்றலான. 42

 

திணையொடு பழகிய பெயர் அலங்கடையே. 43

 

 

 

6. வினையியல்

 

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது

நினையும் காலை காலமொடு தோன்றும். 1

 

காலம்தாமே மூன்று என மொழிப. 2

 

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்

மெய்ந் நிலை உடைய தோன்றலாறே. 3

 

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்

காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்

உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம் மூ உருபின தோன்றலாறே. 4

 

அவைதாம்,

அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்

உம்மொடு வரூஉம் க ட த ற என்னும்

அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்

பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. 5

 

க ட த ற என்னும்

அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு

ஏன் அல் என வரூஉம் ஏழும்

தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. 6

 

அவற்றுள்,

செய்கு என் கிளவி வினையொடு முடியினும்

அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 7

 

அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்

ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 8

 

அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்

பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 9

 

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியும் என்ப. 10

 

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட

முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே. 11

 

அவற்றுள்,

பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி

எண் இயல் மருங்கின் திரிபவை உளவே. 12

 

யாஅர் என்னும் வினாவின் கிளவி

அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே. 13

 

பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்

ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே. 14

 

ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். 15

 

அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்

கண் என் வேற்றுமை நிலத்தினானும்

ஒப்பினானும் பண்பினானும் என்று

அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும். 16

 

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்

அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்

என்ன கிளவியும் குறிப்பே காலம். 17

 

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்

காலக் கிளவி உயர்திணை மருங்கின்

மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. 18

 

அ ஆ வ என வரூஉம் இறுதி

அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை. 19

 

ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த

குன்றியலுகரத்து இறுதி ஆகும். 20

 

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே. 21

 

அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்

ஒக்கும் என்ப எவன் என் வினாவே. 22

 

இன்று இல உடைய என்னும் கிளவியும்

அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்

பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்

பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்

ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ

அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும். 23

 

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்

காலக் கிளவி அஃறிணை மருங்கின்

மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. 24

 

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி

இன்மை செப்பல் வேறு என் கிளவி

செய்ம்மன செய்யும் செய்த என்னும்

அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்

திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி

இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. 25

 

அவற்றுள்,

முன்னிலைக் கிளவி

இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்

ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். 26

 

இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்

பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்

சொல் ஓரனைய என்மனார் புலவர். 27

 

எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி

ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. 28

அவற்றுள்,

முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு

மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி. 29

 

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை

அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்

செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. 30

 

செய்து செய்யூ செய்பு செய்தென

செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என

அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி. 31

 

பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்

அன்ன மரபின் காலம் கண்ணிய

என்ன கிளவியும் அவற்று இயல்பினவே. 32

 

அவற்றுள்,

முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. 33

 

அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்

சினையொடு முடியா முதலொடு முடியினும்

வினை ஓரனைய என்மனார் புலவர். 34

 

ஏனை எச்சம் வினைமுதலானும்

ஆன் வந்து இயையும் வினைநிலையானும்

தாம் இயல் மருங்கின் முடியும் என்ப. 35

 

பல் முறையானும் வினையெஞ்சுகிளவி

சொல் முறை முடியாது அடுக்குந வரினும்

முன்னது முடிய முடியுமன் பொருளே. 36

 

நிலனும் பொருளும் காலமும் கருவியும்

வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட

அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய

செய்யும் செய்த என்னும் சொல்லே. 37

 

அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி

முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே. 38

 

பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்

எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா. 39

 

தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்

எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார். 40

 

அவற்றுள்,

செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு

மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்

அவ் இடன் அறிதல் என்மனார் புலவர். 41

செய்து என் எச்சத்து இறந்த காலம்

எய்து இடன் உடைத்தே வாராக் காலம். 42

 

முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை

எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து

மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும். 43

 

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்

ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள என்மனார் புலவர். 44

 

மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி

அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி

செய்வது இல் வழி நிகழும் காலத்து

மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. 45

 

இது செயல் வேண்டும் என்னும் கிளவி

இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே

தன் பாலானும் பிறன் பாலானும். 46

 

வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்

எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. 47

 

வாராக் காலத்து வினைச்சொல் கிளவி

இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்

இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. 48

 

செயப்படுபொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே. 49

 

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்

சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. 50

 

ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். 51

 

 

 

7. இடையியல்

 

இடை எனப்படுப பெயரொடும் வினையொடும்

நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே. 1

 

அவைதாம்,

புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்

வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும்

வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்

அசைநிலை கிளவி ஆகி வருநவும்

இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்

தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும்

ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும் என்று

அப் பண்பினவே நுவலும் காலை. 2

 

அவைதாம்,

முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்

தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும்

அன்னவை எல்லாம் உரிய என்ப. 3

 

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று

அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே. 4

 

விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று

அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே. 5

 

அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று

அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே. 6

 

எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை

முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று

அப் பால் எட்டே உம்மைச் சொல்லே. 7

 

பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை

தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ

இரு மூன்று என்ப ஓகாரம்மே. 8

 

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே

ஈற்றசை இவ் ஐந்து ஏகாரம்மே. 9

 

வினையே குறிப்பே இசையே பண்பே

எண்ணே பெயரொடு அவ் அறு கிளவியும்

கண்ணிய நிலைத்தே என என் கிளவி. 10

 

என்று என் கிளவியும் அதன் ஓரற்றே. 11

 

விழைவின் தில்லை தன்னிடத்து இயலும். 12

 

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்

அளபின் எடுத்த இசைய என்ப. 13

 

மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை

அப் பால் இரண்டு என மொழிமனார் புலவர். 14

 

எற்று என் கிளவி இறந்த பொருட்டே. 15

 

மற்றையது என்னும் கிளவிதானே

சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே. 16

 

மன்ற என் கிளவி தேற்றம் செய்யும். 17

 

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே. 18

 

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று

ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப. 19

 

கொல்லே ஐயம். 20

 

எல்லே இலக்கம். 21

 

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி

பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே. 22

 

அசைநிலைக் கிளவி ஆகு வழி அறிதல். 23

 

ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை

ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப. 24

 

மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல். 25

 

மியா இக மோ மதி இகும் சின் என்னும்

ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். 26

 

அவற்றுள்,

இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும்

தகு நிலை உடைய என்மனார் புலவர். 27

 

அம்ம கேட்பிக்கும். 28

 

ஆங்க உரையசை. 29

 

ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும். 30

 

யா கா

பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்

ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. 31

 

ஆக ஆகல் என்பது என்னும்

ஆவயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை. 32

 

ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே

ஆயியல் நிலையும் காலத்தானும்

அளபெடை நிலையும் காலத்தானும்

அளபெடை இன்றித் தான் வரும் காலையும்

உள என மொழிப பொருள் வேறுபடுதல்

குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். 33

 

நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும்

அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும்

அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும். 34

 

எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்

தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே. 35

 

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்

பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். 36

 

முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்

எச்சக் கிளவி உரித்தும் ஆகும். 37

 

ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி

கூற்றுவயின் ஒர் அளபு ஆகலும் உரித்தே. 38

 

உம்மை எண்ணும் என என் எண்ணும்

தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே. 39

 

எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும்

எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர். 40

 

உம்மை தொக்க எனா என் கிளவியும்

ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும்

ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. 41

 

அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்

பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும்

ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்

யாவயின் வரினும் தொகை இன்று இயலா. 42

 

உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார். 43

 

உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே. 44

 

வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா

நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே. 45

 

என்றும் எனவும் ஒடுவும் தோன்றி

ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே. 46

 

அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என

மெய் பெறக் கிளந்த இயல ஆயினும்

வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றி

திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே. 47

 

கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்

கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே. 48

 

 

 

8. உரியியல்

 

உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை

இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி

பெயரினும் வினையினும் மெய் தடுமாறி

ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்

பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்

பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி

தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்

எச் சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல். 1

 

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா

வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. 2

 

அவைதாம்,

உறு தவ நனி என வரூஉம் மூன்றும்

மிகுதி செய்யும் பொருள என்ப. 3

 

உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும். 4

 

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே. 5

 

சல்லல் இன்னல் இன்னாமையே.6

 

மல்லல் வளனே ஏ பெற்று ஆகும். 7

 

உகப்பே உயர்தல் உவப்பே உவகை. 8

 

பயப்பே பயன் ஆம். 9

 

பசப்பு நிறன் ஆகும். 10

இயைபே புணர்ச்சி. 11

 

இசைப்பு இசை ஆகும். 12

 

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. 13

 

மழவும் குழவும் இளமைப் பொருள. 14

 

சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே. 15

 

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். 16

 

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள. 17

 

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். 18

 

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. 19

 

தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும். 20

 

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 21

 

தடவும் கயவும் நளியும் பெருமை. 22

 

அவற்றுள்,

தட என் கிளவி கோட்டமும் செய்யும். 23

 

கய என் கிளவி மென்மையும் செய்யும். 24

 

நளி என் கிளவி செறிவும் ஆகும். 25

 

பழுது பயம் இன்றே. 26

 

சாயல் மென்மை. 27

 

முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே. 28

 

வம்பு நிலை இன்மை. 29

 

மாதர் காதல். 30

 

நம்பும் மேவும் நசை ஆகும்மே. 31

 

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். 32

 

புலம்பே தனிமை. 33

 

துவன்று நிறைவு ஆகும். 34

 

முரஞ்சல் முதிர்வே. 35

 

வெம்மை வேண்டல். 36

 

பொற்பே பொலிவு. 37

 

வறிது சிறிது ஆகும். 38

 

எற்றம் நினைவும் துணிவும் ஆகும். 39

 

பிணையும் பேணும் பெட்பின் பொருள. 40

 

பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும். 41

 

படரே உள்ளல் செலவும் ஆகும். 42

 

பையுளும் சிறுமையும் நோயின் பொருள. 43

 

எய்யாமையே அறியாமையே. 44

 

நன்று பெரிது ஆகும். 45

 

தாவே வலியும் வருத்தமும் ஆகும் 46

 

தெவுக் கொளல் பொருட்டே. 47

 

தெவ்வுப் பகை ஆகும். 48

 

விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. 49

 

அவற்றுள்,

விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். 50

 

கம்பலை சும்மை கலியே அழுங்கல்

என்று இவை நான்கும் அரவப் பொருள. 51

 

அவற்றுள்,

அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். 52

 

கழும் என் கிளவி மயக்கம் செய்யும். 53

 

செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். 54

 

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும். 55

 

கருவி தொகுதி. 56

 

கம நிறைந்து இயலும். 57

 

அரியே ஐம்மை. 58

 

கவவு அகத்திடுமே. 59

 

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்

இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர். 60

 

அவற்றுள்,

இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும். 61

 

இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. 62

 

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள. 63

 

கவர்வு விருப்பு ஆகும். 64

 

சேரே திரட்சி. 65

 

வியல் என் கிளவி அகலப் பொருட்டே. 66

 

பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி

ஆ முறை மூன்றும் அச்சப் பொருள. 67

 

வய வலி ஆகும். 68

 

வாள் ஒளி ஆகும். 69

 

துய என் கிளவி அறிவின் திரிபே. 70

 

உயாவே உயங்கல். 71

 

உசாவே சூழ்ச்சி. 72

 

வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம். 73

 

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள. 74

 

நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப. 75

 

நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. 76

 

புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே. 77

 

நனவே களனும் அகலமும் செய்யும். 78

 

மதவே மடனும் வலியும் ஆகும். 79

 

மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. 80

 

புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி. 81

 

அமர்தல் மேவல். 82

 

யாணுக் கவின் ஆம். 83

 

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. 84

 

கடி என் கிளவி

வரைவே கூர்மை காப்பே புதுமை

விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே

அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும்

மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. 85

 

ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. 86

 

ஐ வியப்பு ஆகும். 87

 

முனைவு முனிவு ஆகும். 88

 

வையே கூர்மை. 89

 

எறுழ் வலி ஆகும். 90

 

மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்

முன்னும் பின்னும் வருபவை நாடி

ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்

தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே. 91

 

கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல

வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே. 92

 

பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே 93

 

பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின். 94

 

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. 95

 

மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. 96

 

எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே 97

 

அன்ன பிறவும் கிளந்த அல்ல

பல் முறையானும் பரந்தன வரூஉம்

உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட

இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்

வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து

ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்

பாங்குற உணர்தல் என்மனார் புலவர். 98

 

 

 

9. எச்சவியல்

 

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. 1

 

அவற்றுள்,

இயற்சொல்தாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி

தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. 2

 

ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்

வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்

இரு பாற்று என்ப திரிசொல் கிளவி. 3

 

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. 4

 

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5

 

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6

 

அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை

வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்

விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்

நாட்டல் வலிய என்மனார் புலவர். 7

 

நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று

அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே. 8

 

அவற்றுள்,

நிரல்நிறைதானே

வினையினும் பெயரினும் நினையத் தோன்றி

சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல். 9

 

சுண்ணம்தானே

பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்

ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல். 10

 

அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து

சீர் நிலை திரியாது தடுமாறும்மே. 11

 

பொருள் தெரி மருங்கின்

ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்

தோற்றமும் வரையார் அடிமறியான. 12

 

மொழிமாற்று இயற்கை

சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய

முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல். 13

 

த ந நு எ எனும் அவை முதல் ஆகிய

கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. 14

 

இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று

அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே. 15

 

வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே

வினையின்தொகையே பண்பின்தொகையே

உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று

அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே. 16

 

அவற்றுள்,

வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல. 17

 

உவமத்தொகையே உவம இயல. 18

 

வினையின்தொகுதி காலத்து இயலும். 19

 

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று

அன்ன பிறவும் அதன் குணம் நுதலி

இன்னது இது என வரூஉம் இயற்கை

என்ன கிளவியும் பண்பின்தொகையே. 20

 

இரு பெயர் பல பெயர் அளவின்பெயரே

எண்ணியற்பெயரே நிறைப்பெயர்க் கிளவி

எண்ணின்பெயரொடு அவ் அறு கிளவியும்

கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே. 21

 

பண்பு தொக வரூஉம் கிளவியானும்

உம்மை தொக்க பெயர்வயினானும்

வேற்றுமை தொக்க பெயர்வயினானும்

ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே. 22

 

அவைதாம்,

முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும்

இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும்

அந் நான்கு என்ப பொருள் நிலை மரபே. 23

 

எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. 24

 

உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே

பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர். 25

 

வாரா மரபின வரக் கூறுதலும்

என்னா மரபின எனக் கூறுதலும்

அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான்

இன்ன என்னும் குறிப்புரை ஆகும். 26

 

இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். 27

 

விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். 28

 

கண்டீர் என்றா கொண்டீர் என்றா

சென்றது என்றா போயிற்று என்றா

அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி

நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப. 29

 

கேட்டை என்றா நின்றை என்றா

காத்தை என்றா கண்டை என்றா

அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி

முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. 30

 

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற

சிறப்புடை மரபின் அம் முக் காலமும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம் மூ இடத்தான் வினையினும் குறிப்பினும்

மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்

அவ் ஆறு என்ப முற்று இயல் மொழியே. 31

 

எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். 32

 

அவைதாம்,

தம்தம் கிளவி அடுக்குந வரினும்

எத் திறத்தானும் பெயர் முடிபினவே. 33

 

பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை

எதிர்மறை உம்மை எனவே சொல்லே

குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும்

நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி. 34

 

அவற்றுள்,

பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. 35

 

வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும்

நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே

ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. 36

 

பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே. 37

 

ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. 38

 

எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. 39

 

உம்மை எச்சம் இரு ஈற்றானும்

தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே. 40

 

தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை

நிகழும் காலமொடு வாராக் காலமும்

இறந்த காலமொடு வாராக் காலமும்

மயங்குதல் வரையார் முறைநிலையான. 41

 

என என் எச்சம் வினையொடு முடிமே. 42

 

எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்

எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப. 43

 

அவைதாம்,

தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும். 44

 

சொல் என் எச்சம் முன்னும் பின்னும்

சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே. 45

 

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். 46

 

மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல். 47

 

ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்

இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 48

 

அவற்றுள்,

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 49

 

தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 50

 

கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 51

 

கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்

தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்

தன்னிடத்து இயலும் என்மனார் புலவர். 52

 

பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்

திசைநிலை கிளவியின் ஆஅகுநவும்

தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்

மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்

மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்

அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. 53

 

செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்

செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே. 54

 

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்

அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. 55

 

கடி சொல் இல்லை காலத்துப் படினே. 56

 

குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல். 57

 

குறைத்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. 58

 

இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. 59

 

உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. 60

 

வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய. 61

 

உரையிடத்து இயலும் உடனிலை அறிதல். 62

 

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே

இன்ன என்னும் சொல் முறையான. 63

 

ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். 64

 

ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி

பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. 65

 

முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி

பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே

ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். 66

 

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்

மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்

பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது

சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல். 67

 

சொல்லதிகாரம் முற்றிற்று

 

 

 

 

தொல்காப்பியம் - மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்

 

 

1. அகத்திணையியல்

 

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழு திணை என்ப. 1

 

அவற்றுள்,

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய

படு திரை வையம் பாத்திய பண்பே. 2

 

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலும் காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடும் காலை. 3

 

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே. 4

 

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 5

 

காரும் மாலையும் முல்லை. 6

 

குறிஞ்சி,

கூதிர் யாமம் என்மனார் புலவர். 7

 

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8

 

வைகறை விடியல் மருதம். 9

 

எற்பாடு,

நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10

 

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. 11

 

பின்பனிதானும் உரித்து என மொழிப. 12

 

இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 13

 

திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே

நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப

புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. 14

 

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. 15

 

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. 16

 

கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்

உண்டு என மொழிப ஓர் இடத்தான. 17

 

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. 18

 

முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே. 19

 

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ் வகை பிறவும் கரு என மொழிப. 20

 

எந் நில மருங்கின் பூவும் புள்ளும்

அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

வந்த நிலத்தின் பயத்த ஆகும். 21

 

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய

திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே. 22

 

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23

 

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே. 24

 

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்

கடிவரை இல புறத்து என்மனார் புலவர். 25

 

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்

ஆகிய நிலைமை அவரும் அன்னர். 26

 

ஓதல் பகையே தூது இவை பிரிவே. 27

 

அவற்றுள்,

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. 28

 

தானே சேறலும் தன்னொடு சிவணிய

ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. 29

 

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

முல்லை முதலாச் சொல்லிய முறையான்

பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்

இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே. 30

 

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. 31

 

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. 32

 

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான. 33

 

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய

ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே. 34

 

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. 35

 

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான. 36

 

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. 37

 

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான. 38

 

தன்னும் அவனும் அவளும் சுட்டி

மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்

நன்மை தீமை அச்சம் சார்தல் என்று

அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ

முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றாய் புலம்பலும்

ஆகிய கிளவியும் அவ் வழி உரிய. 39

 

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே. 40

 

அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. 41

 

தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்

போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்

நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித்

தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்

நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை

அழிந்தது களை என மொழிந்தது கூறி

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு

என்று இவை எல்லாம் இயல்புற நாடின்

ஒன்றித் தோன்றும் தோழி மேன. 42

 

பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

ஊரது சார்பும் செல்லும் தேயமும்

ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்

புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு

அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்

தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்

சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்

கண்டோர் மொழிதல் கண்டது என்ப. 43

 

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்

ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்

இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்

கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்

கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட

அப் பால் பட்ட ஒரு திறத்தானும்

நாளது சின்மையும் இளமையது அருமையும்

தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்

இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்

அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்

ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்

வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு

ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்

தூது இடையிட்ட வகையினானும்

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்

மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்

தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்

பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்

பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்

காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்

பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி

இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு

உரைத் திற நாட்டம் கிழவோன் மேன. 44

 

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே. 45

 

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். 46

 

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. 47

 

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி

விரவும் பொருளும் விரவும் என்ப. 48

 

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. 49

 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்

கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. 50

 

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். 51

 

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. 52

 

காமம் சாலா இளமையோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 53

 

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇ

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54

 

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. 55

 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 56

 

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். 57

 

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. 58

 

 

 

2. புறத்திணையியல்

 

அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சிதானே குறிஞ்சியது புறனே

உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே. 1

 

வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். 2

 

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

புடை கெடப் போகிய செலவே புடை கெட

ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்

முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய

ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே

நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்

தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என

வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும். 3

 

மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4

 

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்

போந்தை வேம்பே ஆர் என வரூஉம்

மா பெருந்தானையர் மலைந்த பூவும்

வாடா வள்ளி வயவர் ஏத்திய

ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா

உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்

தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்

வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று

இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க

நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று

இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 5

 

வஞ்சிதானே முல்லையது புறனே

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்

அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. 6

 

இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்

வயங்கல் எய்திய பெருமையானும்

கொடுத்தல் எய்திய கொடைமையானும்

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்

மாராயம் பெற்ற நெடுமொழியானும்

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்

வரு விசைப் புனலைக் கற் சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்

குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்

அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ

கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே. 7

 

உழிஞைதானே மருதத்துப் புறனே

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. 8

 

அதுவேதானும் இரு நால் வகைத்தே. 9

 

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்

அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட

ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்

வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட

சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே. 10

 

குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்

சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்

புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்

நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று

ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற

தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ

வகை நால் மூன்றே துறை என மொழிப. 11

 

தும்பைதானே நெய்தலது புறனே

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12

 

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு

இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13

 

தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூ வகை நிலையும்

வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்

தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்

இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு

கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து

பாழி கொள்ளும் ஏமத்தானும்

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு

பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து

இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்

ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்

செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ

ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14

 

வாகைதானே பாலையது புறனே

தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. 15

 

அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐ வகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்

மறு இல் செய்தி மூ வகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்

பால் அறி மரபின் பொருநர்கண்ணும்

அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்

தொகை நிலைபெற்றது என்மனார் புலவர். 16

 

கூதிர் வேனில் என்று இரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்

ஏரோர் களவழி அன்றி களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்

வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்

ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்

பெரும் பகை தாங்கும் வேலினானும்

அரும் பகை தாங்கும் ஆற்றலானும்

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்

சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து

தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்

பகட்டினானும் ஆவினானும்

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

கடி மனை நீத்த பாலின்கண்ணும்

எட்டு வகை நுதலிய அவையகத்தானும்

கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்

இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்

பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்

பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்

அருளொடு புணர்ந்த அகற்சியானும்

காமம் நீத்த பாலினானும் என்று

இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. 17

 

காஞ்சிதானே பெருந்திணைப் புறனே

பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே. 18

 

மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்

புண் கிழித்து முடியும் மறத்தினானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்

இன்னன் என்று இரங்கிய மன்னையானும்

இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்

துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்

துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்

நீத்த கணவன் தீர்த்த வேலின்

பேஎத்த மனைவி ஆஞ்சியானும்

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்

முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ

ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்

மாய்ந்த பூசல் மயக்கத்தானும்

தாமே எய்திய தாங்க அரும் பையுளும்

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்

செல்வோர் செப்பிய மூதானந்தமும்

நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து

தனி மகள் புலம்பிய முதுபாலையும்

கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்

சொல் இடையிட்ட பாலை நிலையும்

மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த

தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்

மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே.19

 

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடும் காலை நால் இரண்டு உடைத்தே. 20

 

அமரர்கண் முடியும் அறு வகையானும்

புரை தீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. 21

வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்

முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை

வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே. 22

 

காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். 23

 

குழவி மருங்கினும் கிழவது ஆகும். 24

 

ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப

வழக்கொடு சிவணிய வகைமையான. 25

 

மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.26

 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. 27

 

கொற்றவள்ளை ஓர் இடத்தான. 28

 

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்

சேய் வரல் வருத்தம் வீட வாயில்

காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்

கண்படை கண்ணிய கண்படை நிலையும்

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்

வேலை நோக்கிய விளக்கு நிலையும்

வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்

கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ

தொக்க நான்கும் உள என மொழிப. 29

 

தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்

சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி

பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி

பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்

மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்

மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்

பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி

நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே. 30

 

 

 

3. களவியல்

 

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.1

 

ஒன்றே வேறே என்று இரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே. 2

 

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப

இழிந்துழி இழிபே சுட்டலான. 3

 

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப. 4

 

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

 

குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்

ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். 6

 

பெருமையும் உரனும் ஆடூஉ மேன. 7

 

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. 8

 

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்

சிறப்புடை மரபினவை களவு என மொழிப. 9

 

முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்

நல் நயம் உரைத்தல் நகை நனி உறாஅ

அந் நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்

தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று

இன்னவை நிகழும் என்மனார் புலவர். 10

 

மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்

இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்

தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ

பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்

குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்

நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்

தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி

குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்

தண்டாது இரப்பினும் மற்றைய வழியும்

சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்

அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின்

கேடும் பீடும் கூறலும் தோழி

நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி

மடல் மா கூறும் இடனுமார் உண்டே. 11

 

பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்

அன்புற்று நகினும் அவட் பெற்று மலியினும்

ஆற்றிடை உறுதலும் அவ் வினைக்கு இயல்பே. 12

 

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

 

முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. 14

 

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. 15

 

முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே. 16

 

இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்

காணா வகையின் பொழுது நனி இகப்பினும்

தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்

காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்

புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி

பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்

வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்

தாளாண் எதிரும் பிரிவினானும்

நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்

வரைதல் வேண்டித் தோழி செப்பிய

புரை தீர் கிளவி புல்லிய எதிரும்

வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்துப்

புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ

கிழவோள் மேன என்மனார் புலவர். 17

 

காமத் திணையின் கண் நின்று வரூஉம்

நாணும் மடனும் பெண்மைய ஆகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயினான. 18

 

காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உள என மொழிப. 19

 

சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்

அல்ல கூற்றுமொழி அவள்வயினான. 20

 

மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல்

நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்

வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல்

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்

கைப்பட்டுக் கலங்கினும் நாணு மிக வரினும்

இட்டுப் பிரிவு இரங்கினும் அருமை செய்து அயர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும்

நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்

பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்

கூறிய வா`யில் கொள்ளாக் காலையும்

மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர் செல

வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்

நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்

அருமை சான்ற நால் இரண்டு வகையின்

பெருமை சான்ற இயல்பின்கண்ணும்

பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்

வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்

குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்

வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்

தமர் தற் காத்த காரண மருங்கினும்

தன் குறி தள்ளிய தெருளாக் காலை

வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்

தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்

வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்

பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்

அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்

காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்

ஏமம் சான்ற உவகைக்கண்ணும்

தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்

அன்னவும் உளவே ஓர் இடத்தான. 21

 

வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும்

வரையா நாளிடை வந்தோன் முட்டினும்

உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்

தானே கூறும் காலமும் உளவே. 22

 

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்

தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு

காமக் கிழவன் உள்வழிப் படினும்

தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்

ஆ வகை பிறவும் தோன்றுமன் பொருளே. 23

 

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்

புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்

உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது

பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்

குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்

பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும்

அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப்

பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும்

முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்

அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு

எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்

வந்த கிழவனை மாயம் செப்பிப்

பொறுத்த காரணம் குறித்த காலையும்

புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்

குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக

தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ

பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்

நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்

எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்

புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்

வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்

புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்

ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்

செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்

என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ

அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்

காப்பின் கடுமை கையற வரினும்

களனும் பொழுதும் வரை நிலை விலக்கி

காதல் மிகுதி உளப்படப் பிறவும்

நாடும் ஊரும் இல்லும் குடியும்

பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி

அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ

அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்

ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து

பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்

அவன் விலங்குறினும் களம் பெறக் காட்டினும்

பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்

முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்

புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்

வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும்

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட

பாங்குற வந்த நால் எட்டு வகையும்

தாங்க அருஞ் சிறப்பின் தோழி மேன. 24

 

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்

அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்

கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்

ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்

காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்

தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்

போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக்

கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்

பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்

இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்

இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு

அன்னவை பிறவும் செவிலி மேன. 25

 

தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. 26

 

கிழவோன் அறியா அறிவினள் இவள் என

மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. 27

 

தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்

எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை

பிற நீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந் நீர் போலும் உணர்விற்று என்ப. 28

 

காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின்

தாமே தூதுவர் ஆகலும் உரித்தே. 29

 

அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்

களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

தான் செலற்கு உரிய வழி ஆகலான. 30

 

தோழியின் முடியும் இடனுமார் உண்டே. 31

 

முந் நாள் அல்லது துணை இன்று கழியாது

அந் நாள் அகத்தும் அது வரைவு இன்றே. 32

 

பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்

நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்

துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

துணையோர் கருமம் ஆகலான. 33

 

ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்

தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். 34

 

தோழிதானே செவிலி மகளே. 35

 

சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. 36

 

குறையுற உணர்தல் முன் உற உணர்தல்

இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என

மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே. 37

 

அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது

பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப. 38

 

முயற்சிக் காலத்து அதற்பட நாடி

புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான. 39

 

குறி எனப்படுவது இரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்றது என்ப. 40

 

இரவுக் குறியே இல்லகத்துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலையான. 41

 

பகல் புணர் களனே புறன் என மொழிப

அவள் அறிவு உணர வரு வழியான. 42

 

அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே

அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே. 43

 

ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே

ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான. 44

 

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை. 45

 

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்

ஊறும் உளப்பட அதன் ஓரன்ன. 46

 

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. 47

 

தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும். 48

 

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்

அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும். 49

 

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

 

வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை. 51

 

 

 

4. கற்பியல்

 

கற்பு எனப்படுவது கரணமொடு புணர

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1

 

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன் போகிய காலையான. 2

 

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3

 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.4

 

கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்

எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்

அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்

நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ

குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்

நாமக் காலத்து உண்டு எனத் தோழி

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்

அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ

சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என

ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என

அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்

அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்

ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்

களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்

அந்தரத்து எழுதிய எழுத்தின் மான

வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்

அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும்

தான் அவட் பிழைத்த பருவத்தானும்

நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி

பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி

தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்

புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்

நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி

ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்

செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்

பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது

உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி

அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்

மெல்லென் சீறடி புல்லிய இரவினும்

உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்

பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்

பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்

பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்

நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்

சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்

காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்

தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்

உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்

மடம் பட வந்த தோழிக்கண்ணும்

வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்

மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்

அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்

பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்

காமக் கிழத்தி மனையோள் என்று இவர்

ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்

சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி

இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்

அருந் தொழில் முடித்த செம்மல் காலை

விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்

மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்

கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்

ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ

பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்

எண்ண அருஞ் சிறப்பின் கிழவோன் மேன. 5

 

அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்

ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும்

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்

பெருமையின் திரியா அன்பின்கண்ணும்

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்

அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி

நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ

நளியின் நீக்கிய இளி வரு நிலையும்

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு

அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி

இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி

எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி

எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்ணும்

செல்லாக் காலை செல்க என விடுத்தலும்

காமக் கிழத்தி தன் மகத் தழீஇ

ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்

சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி

அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை

புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்

அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது

நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ

பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்

கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி

காதல் எங்கையர் காணின் நன்று என

மாதர் சான்ற வகையின்கண்ணும்

தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை

மாயப் பரத்தை உள்ளிய வழியும்

தன்வயின் சிறைப்பினும் அவன் வயின் பிரிப்பினும்

இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்

காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய

தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்

கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை

வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை

காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்

ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்

வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ

கிழவோள் செப்பல் கிழவது என்ப. 6

 

புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து

இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி

அன்புறு தக்க கிளத்தல் தானே

கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். 7

 

தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்

ஆவயின் நிகழும் என்மனார் புலவர். 8

 

பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த

தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்

அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாக்

கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்

சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்

அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை

அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்

பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி

இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்

வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்

சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்

மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்

பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்

சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்

பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து

பெறு தகை இல்லாப் பிழைப்பினும் அவ் வழி

உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய

கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்

உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்

உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று

தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்

அருமைக் காலத்துப் பெருமை காட்டிய

எளிமைக் காலத்து இரக்கத்தானும்

பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்

பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்

காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்

பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய

மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்

வகை பட வந்த கிளவி எல்லாம்

தோழிக்கு உரிய என்மனார் புலவர். 9

 

புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்

இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்

பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்

மறையின் வந்த மனையோள் செய்வினை

பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்

காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்

தாய் போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்

காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்

இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து

பின்னர் வந்த வாயிற்கண்ணும்

மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்

மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்

எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்

கண்ணிய காமக்கிழத்தியர் மேன. 10

 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய. 11

 

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரிய ஆகும் என்ப. 12

 

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. 13

 

இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்

கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின். 14

 

உணர்ப்பு வரை இறப்பினும் செய் குறி பிழைப்பினும்

புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய. 15

 

புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்

சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய. 16

 

பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி

மடத் தகு கிழமை உடைமையானும்

அன்பிலை கொடியை என்றலும் உரியள். 17

 

அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி

அகம் மலி ஊடல் அகற்சிக்கண்ணும்

வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 18

 

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணும் காலை கிழவோற்கு உரித்தே

வழிபடு கிழமை அவட்கு இயலான. 19

 

அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி

பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. 20

 

களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. 21

 

அலரின் தோன்றும் காமத்து மிகுதி. 22

 

கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. 23

 

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை

தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை. 24

 

மனைவி முன்னர்க் கையறு கிளவி

மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே. 25

 

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்

பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர். 26

 

தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்

பல் ஆற்றானும் ஊடலின் தகைத்தலும்

உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்

அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன. 27

 

நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. 28

 

ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்

ஏவல் முடிவும் வினாவும் செப்பும்

ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்

தோற்றம் சான்ற அன்னவை பிறவும்

இளையோர்க்கு உரிய கிளவி என்ப. 29

 

உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்

நடக்கை எல்லாம் அவர்கண் படுமே. 30

 

பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்

தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்

இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்

இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர். 31

 

தாய் போல் கழறித் தழீஇக் கோடல்

ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப

கவவொடு மயங்கிய காலையான. 32

 

அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்

மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்

செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான. 33

 

எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார். 34

 

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 35

 

காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும்

கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்

ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்

செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 36

 

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. 37

 

அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர். 38

 

தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்

எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை

முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே. 39

 

கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி

கிழவோன் வினைவயின் உரிய என்ப. 40

 

மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. 41

 

குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். 42

 

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்

வன்புறுத்தல்லது சேறல் இல்லை. 43

 

செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே

வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும். 44

 

கிழவி நிலையே வினையிடத்து உரையார்

வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் 45

 

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையின் பிரிந்த காலையான. 46

 

வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. 47

 

வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. 48

 

ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். 49

 

யாறும் குளனும் காவும் ஆடி

பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப. 50

 

காமம் சான்ற கடைக்கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 51

 

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாட்டி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. 52

 

வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை

இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை

உள்ளம் போல உற்றுழி உதவும்

புள் இயல் கலி மா உடைமையான. 53

 

 

 

5. பொருளியல்

 

இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே

அசை திரிந்து இசையா என்மனார் புலவர். 1

 

நோயும் இன்பமும் இரு வகை நிலையின்

காமம் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடையது போல் உணர்வுடையது போல்

மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ

செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்

அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இரு பெயர் மூன்றும் உரிய ஆக

உவமவாயில் படுத்தலும் உவமம்

ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி. 2

 

கனவும் உரித்தால் அவ் இடத்தான. 3

 

தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின்.4

 

பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே

நட்பின் நடக்கை ஆங்கு அலங்கடையே. 5

 

உயிரும் நாணும் மடனும் என்று இவை

செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. 6

 

வண்ணம் பசந்து புலம்புறு காலை

உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி

புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே. 7

 

உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்

என் உற்றனகொல் இவை எனின் அல்லதை

கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை. 8

 

ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும் காலை

உரியதாகலும் உண்டு என மொழிப. 9

 

தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல் வழி எல்லாம்

மடனொடு நிற்றல் கடன் என மொழிப. 10

 

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி

அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப. 11

 

எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ

அவ் எழு வகைய என்மனார் புலவர். 12

 

உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப் பொருள் வேட்கை கிழவியின் உணர்ப. 13

 

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான. 14

 

பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும்

இரவினும் பகலினும் நீ வா என்றலும்

கிழவோன் தன்னை வாரல் என்றலும்

நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்

புரை பட வந்த அன்னவை பிறவும்

வரைதல் வேட்கைப் பொருள என்ப. 15

 

வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்து என மொழிப. 16

 

தேரும் யானையும் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. 17

 

உண்டற்கு உரிய அல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே. 18

 

பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே

காப்புக் கைம்மிகுதல் உண்மையான

அன்பே அறனே இன்பம் நாணொடு

துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின்

ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே. 19

 

சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. 20

 

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. 21

 

அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின்

வழக்கு என வழங்கலும் பழித்து அன்று என்ப. 22

 

மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க

நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே. 23

 

முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்

நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே.24

 

தாயத்தின் அடையா ஈயச் செல்லா

வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்

அல்லாவாயினும் புல்லுவ உளவே. 25

 

ஒரு பால் கிளவி எனைப் பாற்கண்ணும்

வரு வகைதானே வழக்கு என மொழிப. 26

 

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். 27

 

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத் திரிபு இன்று அஃது என்மனார் புலவர். 28

 

ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்

பிரிதல் அச்சம் உண்மையானும்

அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று

அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும்

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். 29

 

வருத்த மிகுதி சுட்டும் காலை

உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம். 30

 

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையும் காலை புலவியுள் உரிய. 31

 

நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின்

புகழ் தகை வரையார் கற்பினுள்ளே. 32

 

இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. 33

 

இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே

திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. 34

 

அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்

வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. 35

 

செய் பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்

மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே. 36

 

கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும்

உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப. 37

 

கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி

கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். 38

 

தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும்

மெய்ம்மையாக அவர்வயின் உணர்ந்தும்

தலைத்தாட் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே

மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே. 39

 

பொழுது தலைவைத்த கையறு காலை

இறந்த போலக் கிளக்கும் கிளவி

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு

அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப. 40

 

இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி

நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்

வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும்

நல் வகையுடைய நயத்தின் கூறியும்

பல் வகையானும் படைக்கவும் பெறுமே. 41

 

உயர் மொழிக் கிளவி உறழும் கிளவி

ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே. 42

 

உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின்

உரியதாகும் தோழிகண் உரனே. 43

 

உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. 44

 

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தா இன்று உரிய தம்தம் கூற்றே. 45

 

உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே. 46

 

அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. 47

 

மங்கல மொழியும் வைஇய மொழியும்

மாறு இல் ஆண்மையின் சொல்லிய மொழியும்

கூறிய மருங்கின் கொள்ளும் என்ப. 48

 

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு

அனை நால் வகையும் சிறப்பொடு வருமே. 49

 

அன்னை என்னை என்றலும் உளவே

தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்றா மரபின என்மனார் புலவர். 50

 

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா

சாயலும் நாணும் மடனும் என்றா

நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு

ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது

காட்டலாகாப் பொருள என்ப. 51

 

இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும்

அவை இல் காலம் இன்மையான. 52

 

 

 

6. மெய்ப்பாட்டியல்

 

பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும்

கண்ணிய புறனே நால் நான்கு என்ப. 1

 

நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 2

 

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப. 3

 

எள்ளல் இளமை பேதைமை மடன் என்று

உள்ளப்பட்ட நகை நான்கு என்ப. 4

 

இளிவே இழவே அசைவே வறுமை என

விளிவு இல் கொள்கை அழுகை நான்கே. 5

 

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே. 6

 

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே. 7

 

அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே. 8

 

கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே. 9

 

உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. 10

 

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று

அல்லல் நீத்த உவகை நான்கே. 11

 

ஆங்கவை ஒரு பால் ஆக ஒரு பால்

உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்

தன்மை அடக்கம் வரைதல் அன்பு எனாஅ

கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்

நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ

முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை

கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு எனாஅ

கையாறு இடுக்கண் பொச்சாப்பு பொறாமை

வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு எனாஅ

இவையும் உளவே அவை அலங்கடையே. 12

 

புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்

நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு

தகு முறை நான்கே ஒன்று என மொழிப. 13

 

கூழை விரித்தல் காது ஒன்று களைதல்

ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு

ஊழி நான்கே இரண்டு என மொழிப. 14

 

அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்

இல் வலியுறுத்தல் இரு கையும் எடுத்தலொடு

சொல்லிய நான்கே மூன்று என மொழிப. 15

 

பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல்

ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்

கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ

எடுத்த நான்கே நான்கு என மொழிப. 16

 

தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல்

கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு

பொருந்திய நான்கே ஐந்து என மொழிப. 17

 

புறம் செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்

கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு

விளம்பிய நான்கே ஆறு என மொழிப. 18

 

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

மன்னிய வினைய நிமித்தம் என்ப. 19

 

வினை உயிர் மெலிவு இடத்து இன்மையும் உரித்தே. 20

 

அவையும் உளவே அவை அலங்கடையே. 21

 

இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்

எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்

பசி அட நிற்றல் பசலை பாய்தல்

உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல்

கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்

பொய்யாக் கோடல் மெய்யே என்றல்

ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல்

அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்

எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்

ஒப்புவழி உவத்தல் உறு பெயர் கேட்டல்

நலத் தக நாடின் கலக்கமும் அதுவே. 22

 

முட்டுவயின் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல்

அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்

தூது முனிவு இன்மை துஞ்சிச் சேர்தல்

காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று

ஆயிரு நான்கே அழிவு இல் கூட்டம். 23

 

தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல்

இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்

புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம்

அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல்

பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல்

புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ

சிறந்த பத்தும் செப்பிய பொருளே. 24

 

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திரு என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 25

 

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை

என்று இவை இன்மை என்மனார் புலவர். 26

 

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

நல் நயப் பொருள்கோள் எண்ண அருங்குரைத்தே. 27

 

 

 

7. உவமயியல்

 

வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம். 1

 

விரவியும் வரூஉம் மரபின என்ப. 2

 

உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை. 3

 

சிறப்பே நலனே காதல் வலியொடு

அந் நால் பண்பும் நிலைக்களம் என்ப. 4

 

கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும். 5

 

முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்

நுதலிய மரபின் உரியவை உரிய. 6

 

சுட்டிக் கூறா உவமம் ஆயின்

பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. 7

 

உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். 8

 

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும். 9

 

பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்

குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய. 10

 

அவைதாம்,

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப

என்ன மான என்றவை எனாஅ

ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க

என்ற வியப்ப என்றவை எனாஅ

எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப

கள்ள கடுப்ப ஆங்கவை எனாஅ

காய்ப்ப மதிப்ப தகைய மருள

மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅ

புல்ல பொருவ பொற்ப போல

வெல்ல வீழ ஆங்கவை எனாஅ

நாட நளிய நடுங்க நந்த

ஓட புரைய என்றவை எனாஅ

ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்

கூறும் காலைப் பல் குறிப்பினவே. 11

 

அன்ன ஆங்க மான விறப்ப

என்ன உறழ தகைய நோக்கொடு

கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம். 12

 

அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும். 13

 

எள்ள விழைய புல்ல பொருவ

கள்ள மதிப்ப வெல்ல வீழ

என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம். 14

 

கடுப்ப ஏய்ப்ப மருள புரைய

ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று

அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம். 15

 

போல மறுப்ப ஒப்ப காய்த்த

நேர வியப்ப நளிய நந்த என்று

ஒத்து வரு கிளவி உருவின் உவமம். 16

 

தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே. 17

 

நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 18

 

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்

வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப. 19

 

உவமப் பொருளின் உற்றது உணரும்

தெளி மருங்கு உளவே திறத்து இயலான. 20

 

உவமப் பொருளை உணரும் காலை

மரீஇய மரபின் வழக்கொடு வருமே. 21

 

இரட்டைக்கிளவி இரட்டை வழித்தே. 22

 

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி

முன்னை மரபின் கூறும் காலை

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே. 23

 

உவமப் போலி ஐந்து என மொழிப. 24

 

தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்

பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப. 25

 

கிழவி சொல்லின் அவள் அறி கிளவி. 26

 

தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது. 27

 

கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும். 28

 

ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே. 29

 

இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்

உவம மருங்கின் தோன்றும் என்ப. 30

 

கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே. 31

 

கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே. 32

 

தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

கூறுதற்கு உரியர் கொள் வழியான. 33

 

வேறுபட வந்த உவமத் தோற்றம்

கூறிய மருங்கின் கொள் வழிக் கொளாஅல். 34

 

ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. 35

 

உவமத் தன்மையும் உரித்து என மொழிப

பயனிலை புரிந்த வழக்கத்தான. 36

 

தடுமாறு உவமம் கடி வரை இன்றே. 37

 

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே

நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம்

வரன் முறை வந்த மூன்று அலங்கடையே. 38

 

 

 

8. செய்யுளியல்

 

மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ

யாத்த சீரே அடி யாப்பு எனாஅ

மரபே தூக்கே தொடை வகை எனாஅ

நோக்கே பாவே அளவு இயல் எனாஅ

திணையே கைகோள் கூற்று வகை எனாஅ

கேட்போர் களனே கால வகை எனாஅ

பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ

முன்னம் பொருளே துறை வகை எனாஅ

மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்

ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்

அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ

நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என

வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே. 1

 

அவற்றுள்,

மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்

மேல் கிளந்தனவே என்மனார் புலவர். 2

 

குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்

ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி

நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3

இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே

நேர்பும் நிரைபும் ஆகும் என்ப

குறில் இணை உகரம் அல் வழியான. 4

 

இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை. 5

 

தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6

 

ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம். 7

 

முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ

நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும். 8

 

குற்றியலுகரமும் முற்றியலுகரமும்

ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. 9

 

அசையும் சீரும் இசையொடு சேர்த்தி

வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. 10

 

ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்

சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே. 11

 

இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை

உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். 12

 

முன் நிரை உறினும் அன்ன ஆகும். 13

 

நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால. 14

 

இயலசை ஈற்று முன் உரியசை வரினே

நிரையசை இயல ஆகும் என்ப. 15

 

அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. 16

 

ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப. 17

 

இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்

உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 18

 

வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே

வெண் சீர் அல்லா மூ அசை என்ப. 19

 

தன் பா அல் வழி தான் அடைவு இன்றே. 20

 

வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. 21

 

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்

இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே. 22

 

கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. 23

 

கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்

நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே. 24

 

வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. 25

 

இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்

அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே. 26

 

இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே

தளை வகை சிதையாத் தன்மையான. 27

 

வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. 28

 

இன் சீர் இயைய வருகுவது ஆயின்

வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே. 29

 

அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்

ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே. 30

 

நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே. 31

 

அடி உள்ளனவே தளையொடு தொடையே. 32

 

அடி இறந்து வருதல் இல் என மொழிப. 33

 

அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. 34

 

நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப. 35

 

ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. 36

 

பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே

ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. 37

 

மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 38

 

மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 39

 

சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது

நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும். 40

எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே

குன்றலும் மிகுதலுஸ்ம் இல் என மொழிப. 41

 

உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ

உயிர்த் திறம் இயக்கம் இன்மையான. 42

 

வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும். 43

 

தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே. 44

 

முச் சீரானும் வரும் இடன் உடைத்தே. 45

 

அசை கூன் ஆகும் அவ்வயினான. 46

 

சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. 47

 

ஐ வகை அடியும் விரிக்கும் காலை

மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்

எழுபது வகையின் வழு இல ஆகி

அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே. 48

 

ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே

பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை. 49

 

ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய. 50

 

விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே. 51

 

தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்

இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய

தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா. 52

 

சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்

ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும். 53

 

குறளடி முதலா அளவடி காறும்

உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப. 54

 

அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

தளை வகை ஒன்றாத் தன்மையான. 55

 

அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

இரு நெடிலடியும் கலியிற்கு உரிய. 56

 

நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்

வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப. 57

 

விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே. 58

 

இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்

நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே. 59

 

வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்

ஐஞ் சீர் அடியும் உள என மொழிப. 60

 

அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே. 61

 

எழு சீர் அடியே முடுகியல் நடக்கும். 62

 

முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும். 63

 

ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்

மூ வகை அடியும் முன்னுதல் இலவே. 64

 

ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்

தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப. 65

 

இடையும் வரையார் தொடை உணர்வோரே. 66

 

முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். 67

 

வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. 68

 

வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்

அசை சீர்த்து ஆகும் அவ் வழியான. 69

 

நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்

சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப. 70

 

நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்

வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர். 71

 

எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே. 72

 

வெண்பா இயலினும் பண்புற முடியும். 73

 

எழுத்து முதலா ஈண்டிய அடியின்

குறித்த பொருளை முடிய நாட்டல்

யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர். 74

 

பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்

வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர். 75

 

மரபேதானும்,

நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று. 76

 

அகவல் என்பது ஆசிரியம்மே. 77

 

அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. 78

 

துள்ளல் ஓசை கலி என மொழிப. 79

 

தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். 80

 

மருட்பா ஏனை இரு சார் அல்லது

தான் இது என்னும் தனிநிலை இன்றே. 81

 

அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார். 82

 

தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப. 83

 

மோனை எதுகை முரணே இயைபு என

நால் நெறி மரபின தொடை வகை என்ப. 84

 

அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். 85

 

பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்

அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே. 86

 

நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்

மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப. 87

 

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை. 88

 

அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும். 89

 

ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. 90

 

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. 91

 

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. 92

 

அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே. 93

 

ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்

பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே. 94

 

இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப. 95

 

சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்

சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப. 96

 

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே. 97

 

தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும். 98

 

தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப. 99

 

மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே. 100

 

ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என

நால் இயற்று என்ப பா வகை விரியே. 101

 

அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய

மும் முதல் பொருட்கும் உரிய என்ப. 102

 

பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்

ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு

ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. 103

 

ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடைத்தே கலி என மொழிப. 104

 

வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. 105

 

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப

பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. 106

 

வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே

செவியறிவுறூஉ என அவையும் அன்ன. 107

 

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்

தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று

ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே. 108

 

அவையடக்கியலே அரில் தபத் தெரியின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று

எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே. 109

 

செவியுறைதானே,

பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்

அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே. 110

 

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்

குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப. 111

 

குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். 112

 

மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்

செந்தூக்கு இயல என்மனார் புலவர். 113

 

நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே

கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு

ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. 114

 

கைக்கிளைதானே வெண்பா ஆகி

ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. 115

 

பரிபாடல்லே தொகை நிலை வகையின்

இது பா என்னும் இயல் நெறி இன்றி

பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப. 116

 

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக

காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். 117

 

சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்

அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். 118

 

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்

முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்

மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்

சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. 119

 

அங்கதம்தானே அரில் தபத் தெரியின்

செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. 120

 

செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. 121

 

மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். 122

 

செய்யுள்தாமே இரண்டு என மொழிப. 123

 

துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்

செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். 124

 

வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்

அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். 125

 

ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே

கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே. 126

 

அவற்றுள்,

ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும். 127

 

இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என

நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப. 128

 

தரவேதானும் நால் அடி இழிபு ஆய்

ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129

 

இடைநிலைப்பாட்டே,

தரவு அகப்பட்ட மரபினது என்ப. 130

 

அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்

நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி. 131

 

போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே

தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே

புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே. 132

 

ஏனை ஒன்றே,

தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே. 133

 

அதுவே,

வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே. 134

 

வண்ணகம்தானே,

தரவே தாழிசை எண்ணே வாரம் என்று

அந் நால் வகையின் தோன்றும் என்ப. 135

 

தரவேதானும்,

நான்கும் ஆறும் எட்டும் என்ற

நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும். 136

 

ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே

தரவின் சுருங்கித் தோன்றும் என்ப. 137

 

அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும். 138

 

முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. 139

 

எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே

சின்னம் அல்லாக் காலையான. 140

 

ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும். 141

 

கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று

ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். 142

 

தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்

தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்

எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்

அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்

யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது

கொச்சக ஒருபோகு ஆகும் என்ப. 143

 

ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே. 144

 

அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே

செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை. 145

 

எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்

அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே. 146

 

ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்

திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே. 147

 

தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்

ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்

வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்

பாநிலை வகையே கொச்சகக் கலி என

நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே. 148

 

கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்

போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே. 149

 

ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை

ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே. 150

 

நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே

குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே. 151

 

அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். 152

 

கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்

செவியறி வாயுறை புறநிலை என்று இவை

தொகு நிலை மரபின் அடி இல என்ப. 153

 

புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்

திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்

வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்

பண்புற முடியும் பாவின என்ப. 154

 

பரிபாடல்லே,

நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக

ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை. 155

 

அளவியல் வகையே அனை வகைப்படுமே. 156

 

எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

அடி வரை இல்லன ஆறு என மொழிப. 157

 

அவைதாம்,

நூலினான உரையினான

நொடியொடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய முதுமொழியான

மறை மொழி கிளந்த மந்திரத்தான

கூற்று இடை வைத்த குறிப்பினான. 158

 

அவற்றுள்,

நூல் எனப்படுவது நுவலும் காலை

முதலும் முடிவும் மாறுகோள் இன்றி

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து

நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. 159

 

அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. 160

 

ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்

இன மொழி கிளந்த ஓத்தினானும்

பொது மொழி கிளந்த படலத்தானும்

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று

ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. 161

 

அவற்றுள்,

சூத்திரம்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே. 162

 

நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது

ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர். 163

 

ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும். 164

 

மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்

தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப. 165

 

பாட்டு இடை வைத்த குறிப்பினானும்

பா இன்று எழுந்த கிளவியானும்

பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று

உரை வகை நடையே நான்கு என மொழிப.166

 

அதுவேதானும் இரு வகைத்து ஆகும். 167

 

ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே

ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே. 168

 

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவது கிளந்த துணிவினானும்

என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே.169

 

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப. 170

 

நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம் என்ப. 171

 

எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி

பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே. 172

 

பாட்டிடைக் கலந்த பொருள ஆகி

பாட்டின் இயல பண்ணத்திய்யே. 173

 

அதுவேதானும் பிசியொடு மானும். 174

 

அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்

அடி இகந்து வரினும் கடி வரை இன்றே. 175

 

கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்

அளவியல் வகையே அனை வகைப்படுமே. 176

 

கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்

முன் கிளந்தனவே முறையினான. 177

 

காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று

ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு

மறை என மொழிதல் மறையோர் ஆறே. 178

 

மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்

இவை முதலாகிய இயல் நெறி திரியாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே. 179

 

மெய் பெறும் அவையே கைகோள் வகையே. 180

 

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு

அளவு இயல் மரபின் அறு வகையோரும்

களவின் கிளவிக்கு உரியர் என்ப. 181

 

பாணன் கூத்தன் விறலி பரத்தை

ஆணம் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ

தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர். 182

 

ஊரும் அயலும் சேரியோரும்

நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்

கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது

கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும். 183

 

கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்

நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. 184

 

ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு

கண்டோர் மொழிதல் கண்டது என்ப. 185

 

இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன். 186

 

ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு

மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே. 187

 

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்

நினையும் காலை கேட்குநர் அவரே. 188

 

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. 189

 

பரத்தை வாயில் என இரு வீற்றும்

கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே. 190

 

வாயில் உசாவே தம்முள் உரிய. 191

 

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவை அல பிறவும் நுதலிய நெறியான்

சொல்லுந போலவும் கேட்குந போலவும்

சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர். 192

 

ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்

கரும நிகழ்ச்சி இடம் என மொழிப. 193

 

இறப்பே நிகழ்வே எதிரது என்னும்

திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர

பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். 194

 

இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்

தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே. 195

 

உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்

மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும். 196

 

எண் வகை இயல் நெறி பிழையாதாகி

முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே. 197

 

சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை

புல்லிய கிளவி எச்சம் ஆகும். 198

 

இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று

அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம். 199

 

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி

இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது

பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப. 200

 

அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்

பிற அவண் வரினும் திறவதின் நாடி

தம்தம் இயலின் மரபொடு முடியின்

அத் திறம்தானே துறை எனப்படுமே. 201

 

அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்

இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்

மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின். 202

 

மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி

உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே. 203

 

வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. 204

 

அவைதாம்,

பாஅ வண்ணம் தாஅ வண்ணம்

வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்

இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்

நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்

சித்திர வண்ணம் நலிபு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்

ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்

எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்

தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்

உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று

ஆங்கு என மொழிப அறிந்திசினோரே. 205

 

அவற்றுள்,

பாஅ வண்ணம்

சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். 206

 

தாஅ வண்ணம்

இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். 207

 

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. 208

 

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 209

 

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 210

 

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 211

 

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். 212

 

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். 213

 

சித்திர வண்ணம்

நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே. 214

 

நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். 215

 

அகப்பாட்டு வண்ணம்

முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. 216

 

புறப்பாட்டு வண்ணம்

முடிந்தது போன்று முடியாதாகும். 217

 

ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். 218

 

ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். 219

 

எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். 220

 

அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். 221

 

தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். 222

 

ஏந்தல் வண்ணம்

சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும். 223

 

உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 224

 

முடுகு வண்ணம்

அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே.225

 

வண்ணம்தாமே இவை என மொழிப. 226

 

வனப்பு இயல்தானே வகுக்கும் காலை

சில் மென் மொழியான் தாய பனுவலின்

அம்மைதானே அடி நிமிர்வு இன்றே. 227

 

செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்

அவ் வகைதானே அழகு எனப்படுமே. 228

 

தொன்மைதானே

உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. 229

 

இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்

தோல் என மொழிப தொல் மொழிப் புலவர். 230

 

விருந்தேதானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. 231

 

ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்

புள்ளி இறுதி இயைபு எனப்படுமே. 232

 

சேரி மொழியான் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. 233

 

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது

குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்

இழைபின் இலக்கணம் இயைந்ததாகும். 234

 

செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி

இழைத்த இலக்கணம் பிழைத்தன போல

வருவ உள எனினும் வந்தவற்று இயலான்

திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.235

 

 

 

9. மரபியல்

 

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1

 

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்

சேவும் சேவலும் இரலையும் கலையும்

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்

போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்

யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2

 

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்

மூடும் நாகும் கடமையும் அளகும்

மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்

அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3

 

அவற்றுள்,

பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை. 4

 

தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. 5

 

மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு

ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6

 

பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7

 

நாயே பன்றி புலி முயல் நான்கும்

ஆயும் காலை குருளை என்ப. 8

 

நரியும் அற்றே நாடினர் கொளினே. 9

 

குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10

 

பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை

கொள்ளும் காலை நாய் அலங்கடையே. 11

 

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்

ஓடும் புல்வாய் உளப்பட மறியே. 12

 

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. 13

 

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்

அவையும் அன்ன அப் பாலான. 14

 

யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்

மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. 15

 

எருமையும் மரையும் வரையார் ஆண்டே. 16

 

கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. 17

 

ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். 18

 

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 19

 

ஆவும் எருமையும் அது சொலப்படுமே. 20

 

கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். 21

 

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்

நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய. 22

 

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை

கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

 

பிள்ளை குழவி கன்றே போத்து எனக்

கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24

 

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25

 

சொல்லிய மரபின் இளமைதானே

சொல்லும் காலை அவை அல இலவே. 26

 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27

 

புல்லும் மரனும் ஓர் அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28

 

நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29

 

சிதலும் எறும்பும் மூ அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30

 

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31

 

மாவும் மாக்களும் ஐ அறிவினவே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32

 

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே

பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33

 

ஒரு சார் விலங்கும் உள என மொழிப. 34

 

வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல். 35

 

கேழற்கண்ணும் கடி வரை இன்றே. 36

 

புல்வாய் புலி உழை மரையே கவரி

சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும். 37

 

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 38

 

ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும். 39

 

பன்றி புல்வாய் உழையே கவரி

என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய. 40

 

எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 41

 

கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே. 42

 

பெற்றம் எருமை புலி மரை புல்வாய்

மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. 43

 

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய. 44

 

மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். 45

 

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 46

 

கலை என் காட்சி உழைக்கும் உரித்தே

நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும். 47

 

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்

யாத்த என்ப யாட்டின்கண்ணே. 48

 

சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்

மா இருந் தூவி மயில் அலங்கடையே. 49

 

ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்

ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப. 50

 

ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய

பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய

காண்ப அவை அவை அப்பாலான. 51

 

பிடி என் பெண் பெயர் யானை மேற்றே. 52

 

ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை

பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. 53

 

புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப. 54

 

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். 55

 

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை

சூழும் காலை அளகு எனல் அமையா. 56

 

அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 57

 

புல்வாய் நவ்வி உழையே கவரி

சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே. 58

 

பன்றி புல்வாய் நாய் என மூன்றும்

ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை. 59

 

பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. 60

 

பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. 61

 

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. 62

 

எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 63

 

நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே. 64

 

மூடும் கடமையும் யாடு அல பெறாஅ. 65

 

பாட்டி என்ப பன்றியும் நாயும். 66

 

நரியும் அற்றே நாடினர் கொளினே. 67

 

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. 68

 

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்

மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்

செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்

வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்

குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்

இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்

எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்

முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்

கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே. 69

 

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. 70

 

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71

 

படையும் கொடியும் குடையும் முரசும்

நடை நவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72

 

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு

ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73

 

பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்

நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்

பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே. 74

 

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்

யாரும் சார்த்தி அவை அவை பெறுமே. 75

தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய

நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப. 76

 

இடை இரு வகையோர் அல்லது நாடின்

படை வகை பெறாஅர் என்மனார் புலவர். 77

 

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 78

 

மெய் தெரி வகையின் எண் வகை உணவின்

செய்தியும் வரையார் அப் பாலான. 79

 

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. 80

 

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி. 81

 

வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. 82

 

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. 83

 

வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் மாலையும் தேரும் மாவும்

மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. 84

 

அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85

 

புறக் காழனவே புல் என மொழிப. 86

 

அகக் காழனவே மரம் என மொழிப. 87

 

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்

புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88

 

இலையே தளிரே முறியே தோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்

மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89

 

காயே பழமே தோலே செதிளே

வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90

 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்

திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும். 91

 

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை

மரபு வழிப் பட்ட சொல்லினானே. 92

 

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும். 93

 

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான. 94

 

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி

உரை படு நூல்தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின. 95

 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96

 

வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். 97

 

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். 98

 

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே. 99

 

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை

மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி

ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்

முப்பத்திரு வகை உத்தியொடு புணரின்

நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர். 100

 

உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்

புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்

விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு

புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே. 101

 

மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு

சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி

சொல்லும் காலை உரை அகத்து அடக்கி

நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி

துளக்கல் ஆகாத் துணைமை எய்தி

அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி

பல வகையானும் பயன் தெரிபு உடையது

சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர். 102

 

பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்

கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும். 103

 

விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி

சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா

ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்

மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே. 104

 

சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற

இன்றியமையாது இயைபவை எல்லாம்

ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே. 105

 

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்

தன் நூலானும் முடிந்த நூலானும்

ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி

தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ

துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். 106

 

சொல்லப்பட்டன எல்லா மாண்பும்

மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே. 107

 

சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே. 108

 

முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும்

வல்லோன் புணரா வாரம் போன்றே. 109

 

சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்

கூறியது கூறல் மாறு கொளக் கூறல்

குன்றக் கூறல் மிகை படக் கூறல்

பொருள் இல கூறல் மயங்கக் கூறல்

கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்

பழித்த மொழியான் இழுக்கம் கூறல்

தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்

என்ன வகையினும் மனம் கோள் இன்மை

அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். 110

 

எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே. 111

 

ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்

நுதலியது அறிதல் அதிகார முறையே

தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்

மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்

மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்

வாராததனான் வந்தது முடித்தல்

வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்

முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே

ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்

தன் கோள் கூறல் முறை பிறழாமை

பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்

இறந்தது காத்தல் எதிரது போற்றல்

மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்

தான் குறியிடுதல் ஒருதலை அன்மை

முடிந்தது காட்டல் ஆணை கூறல்

பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்

தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்

மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்

பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்

பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்

சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்

தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்

உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்

சொல்லிய அல்ல பிற அவண் வரினும்

சொல்லிய வகையான் சுருங்க நாடி

மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு

இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

நுனித்தகு புலவர் கூறிய நூலே. 112

 

 

பொருளதிகாரம் முற்றிற்று